ஐஎஸ் அமைப்புக்காக உயிரை விட என் சகோதரர் தயார்: புதிய ஜிஹாதி ஜானின் சகோதரி
லண்டன்: இந்திய வம்சாவளி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான சித்தார்த்தா தார் அந்த அமைப்புக்காக இறக்கவும் தயாராக இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் முகமூடியுடன் இருந்த நபர்
இங்கிலாந்தில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்த்தா தார் என்கிற அபு ருமைசா என்று நம்பப்படுகிறது.
இந்துவாக வளர்ந்த சித்தார்த்தாவை அவரது முஸ்லீம் நண்பர் இஸ்லாத்திற்கு மாற வைத்து ஆயிஷா என்ற பெண்ணையும் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் அவரை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான அல் முஜாஹிரூனிலும் சேர்த்துவிட்டார்.
அதன் பிறகு சித்தார்த்தா சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் அபு ருமைசாவின் சகோதரி கோனிகா தார் கூறுகையில்,
என் சகோதரர் தான் சாவுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் இதை போன் செய்து கடந்த ஆண்டு தெரிவித்தார். அவர் சிரியாவுக்கு சென்றதில் இருந்தே திரும்பி
வந்து திருந்தி வாழுமாறு அவரை வலியுறுத்தி வருகிறேன்.
அவரை மூளை சலவை செய்துவிட்டனர். அவர் தீவிரவாதியாக இருந்தாலும் என் சகோதரர் தான். அவர் சிரியாவில் சுட்டுக் கொல்லப்படுவதை விட இங்கிலாந்து வந்து
சிறையில் இருந்து திருந்தி வருவதையே நான் விரும்புகிறேன். கால்நடை மருத்துவராக விரும்பிய அவர் வழிமாறி தீவிரவாதியாகிவிட்டார் என்றார்.
அபு ருமைசா தான் புதிய ஜிஹாதி ஜான் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.