தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்கு நியூசிலாந்தில் 6 வருட சிறை!
வெலிங்டன்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியர் நியூசிலாந்து கோர்ட்டால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து, நியூசிலாந்துக்கு தற்காலிக விசா மூலமாக சென்றவர் தஜிந்தர் சிங் (29). இவர் கிறிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்றுள்ளார். இந்த பார்ட்டிக்கு ஆண். பெண் என பலரும் வந்திருந்தனர். பார்ட்டி முடிந்ததும், அதில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் முதல் தளத்திலுள்ள அறையில் சென்று படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது, அந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்த தஜிந்தர்சிங், போதை மற்றும் தூக்கத்தில் இருந்த அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். அந்த பெண் விழித்து பார்த்தபோது, தஜிந்தர் சிங் நெருக்கமான நிலையில் தன்னுடன் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் தெரிவித்த அடுத்த நாளே, தஜிந்தர்சிங் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அவர் நியூசிலாந்து சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நடந்த வழக்கில் கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவூல் நீயாவே இன்று தீர்ப்பளித்தார். அதன்படி தஜிந்தர்சிங்கிற்கு ஆறு ஆண்டுகள் மற்றும் 9 மாதகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.