ஐடி வேலை வேண்டவே வேண்டாம்.. தூய்மை பணியாளராக மாறிய இளைஞர்.. மாத சம்பளத்தை கேட்டால் ஆடிப்போவீங்க
மாஸ்கோ: மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ துறையில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் தனது பணியை விட்டுவிட்டு இப்போது தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அவருக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.
தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி கைநிறைய சம்பளம் பெற வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. இதனால் தான் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளை முடிக்காதவர்கள் கூட ஐடி சார்ந்த படிப்புகளை தனியே படித்து அந்த துறையில் கால்பதிக்கின்றனர்.

குறிப்பாக தற்போது ஏஐ சார்ந்த துறையில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. இதனால் அந்த படிப்புகளை பலரும் படித்து பணியாற்றி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் ரஷ்யாவில் வேலைக்கு சென்ற 20 இந்தியர்கள் தூய்மை பணியாளர்களாக மாறி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக சொல்லும் வீடியோ வெளியாகி வருகிறது.
அதாவது இந்தியாவை சேர்ந்த முகேஷ் மண்டல் உள்பட 20 பேர் தான் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முகேஷ் மண்டல் உள்பட 17 இந்தியர்கள் ரஷ்யாவுக்கு சென்றனர். இப்போது அவர்கள் 20 இந்தியர்களை கொண்ட குழுவாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முகேஷ் மண்டல் முன்னாள் ஐடி ஊழியர் ஆவார். இன்னும் சிலர் விவசாயம் செய்தவர்கள். மேலும் சிலர் தோல் தொழிலாளி, டிரைவர், கட்டட பணியாளர்கள் உள்பட பலதரப்பட்ட பின்னணியை கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் 19 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
முகேஷ் மண்டல் இந்தியாவில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றினார். இதுபற்றி அவர், "மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன், ஏஐ, சாட்போட்கள், ஜிபிடி போன்ற புதிய பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறேன். அடிப்படையில் நான் டெவலப்பர். இப்போது எனக்கு 26 வயது ஆகிறது. ரஷ்யாவில் பணம் சம்பாதித்து விட்டு இந்தியா திரும் திட்டமிட்டுள்ளேன். நான் எனது வேலையைச் செய்கிறேன்.
நான் ஓர் இந்தியன். ஒரு இந்தியனைப் பொறுத்தவரை, வேலை முக்கியமில்லை. தொழில் என்பது கடவுளுக்குச் சமம். எந்த வேலையையும் நியாயமாக செய்யலாம். இது என் வேலை. என் கடமையை நான் சரியாக செய்வது தான் சரியானதாக இருக்கும். அதனை சிறப்பாக செய்து வருகிறேன்'' என்றார்.
ரஷ்யாவில் கொலோமியாஜ்ஸ்கோயே நிறுவனம் இந்தியர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து தூய்மை பணிகளுக்காக நியமித்துள்ளது. மேலும் அவர்களுக்கு மாதம் சுமார் 100,000 ரூபிள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.1 லட்சம் ஆகும்.
ரஷ்யாவில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இதனால் அவர்கள் தூய்மை பணியாளர்களாக அங்கு பணியாற்றி வருகின்றனர். இதுதொடர்பாக முகேஷ் மண்டல் ரஷ்யாவின் ஃபோன்டங்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தான் இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதுபற்றி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தூய்மை துறையின் தற்காலிக தலைவரான மரியா தியாபினா கூறுகையில், ‛‛ஊழியர்கள் சாலைகளை சுத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தங்குமிடம் தருகிறோம். உணவு, போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications