அமெரிக்க அரசு அராஜகம்.. இந்திய பெண்மணி கைது.. 5 வயது மாற்றுத்திறனாளி மகன் பிரித்து வைப்பு
வாஷிங்டன்: மெக்சிகோ நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய பெண்மணியின் மாற்றுத் திறனாளி குழந்தை அந்த தாயிடமிருந்து பிரித்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு ஜீரோ சகிப்புத்தன்மை என்ற கொள்கையை அமெரிக்க ட்ரம்ப் அரசு கடைபிடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவோர்களை கைது செய்து அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து காப்பகத்தில் தங்க வைக்கும் நடைமுறையை அமெரிக்க அரசு பின்பற்றி வருகிறது.

பெற்றோரிடமிருந்து பிரிப்பு
இதுவரை சுமார் 2300 குழந்தைகள் பெற்றோரிடமிருந்து இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நடைமுறைக்கு மெக்சிகோ அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் வலிமையாக இதை கண்டிக்கவில்லை.

பல நகரங்கள்
இதேபோல, குஜராத்தின், அகமதாபாத்தைச் சேர்ந்த பவன் பட்டேல் என்ற 33 வயது பெண்மணி, கிரீஸ் நாட்டுக்கு சென்று அங்கிருந்து மெக்சிகோ நாட்டுக்குச் சென்று அதன் பிறகு அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக சென்றபோது அதிகாரிகளிடம் தனது 5 வயது மாற்றுத்திறனாளி மகனுடன் கைது செய்யப்பட்டார்.

பிணையில் விட்ட கோர்ட்
இதையடுத்து பவன் பட்டேல அரிசோனா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மகன் தனியாக காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'தி வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக அந்த பெண் கோர்ட்டில் தெரிவித்து அவனை தன்னுடன் சேர்ந்து இருக்க அனுமதிக்க கோரிக்கைவிடுத்ததாகவும், அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், $ 30,000 பிணையத்திற்கு பிறகு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டேல் எப்பொழுது கைது செய்யப்பட்டார், இப்போது அவரின் மகனுடன் சேர்ந்தாரா என்பது குறித்த விவரம் அந்த செய்தியில் இல்லை.

இந்தியர்கள் சிறைவாசம்
இந்தியாவிலிருந்து சமீபத்தில் இவ்வாறு சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேற முயன்று, சுமார் 200 பேர் வாஷிங்டன், நியூ மெக்சிகோ, ஒரேகான், பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக சிறைபட்ட நபர்களை சந்திக்க சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ட்ரம்ப் அரசு இனிமேல் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடைமுறையில் சற்று தளர்வு செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications