இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானத்தின் பெரிய உடற்பகுதி மீட்பு
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் உடற்பகுதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது.

கடலில் இருந்து 103 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி உள்ளிட்ட சில பாகங்கள் கிடைத்தன. இந்நிலையில் உடல்களை தேடும் பணி மட்டும் தொடர்கிறது. ஆனால் விமான பாகங்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது என்று இந்தோனேசியா அறிவித்தது.
இந்நிலையில் விமானத்தின் உடற்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள பாகங்களிலேயே இது தான் பெரிய பாகம் ஆகும். அந்த பாகம் கப்பல் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவியதும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications