ஐபோன்களில் அதிக அளவு கதிர்வீச்சா? அதிரடி காட்டிய பிரான்ஸ்.. இறங்கி வந்த ஆப்பிள் நிறுவனம்.. என்னாச்சு
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் போன்களில் அதிக அளவு கதிர்வீச்சு இருப்பதாகவும் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் ஐபோனுக்கு தடை விதிக்கப்படும் என பிரான்ஸ் எச்சரித்து இருந்தது. இதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் இறங்கி வந்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெட்செட்கள் என உலகில் தனி ஆவர்த்தனம் செய்து வரும் நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் அதன் பிராண்ட்டிற்கே பலரும் ஆப்பிள் போன்களை வாங்க ஆர்வம் காட்டுவதை பார்க்க முடியும். கடந்த 2007- ஆம் ஆண்டு முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஐபோன்கள் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற "Wonderlust" நிகழ்ச்சியில் ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறி உள்ளது. இப்படி ஆப்பிள் தனது புதிய ஐபோன் சீரிசிஸ் போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்தது.
அதாவது, கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனை காரணம் காட்டி பிரான்சில் ஐபோன் 12 விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் அதிர்ந்து போனது. மேலும், சாப்ட்வேர் செய்யப்படுவதன் மூலம் ரேடியேஷன் பிரச்சினையை தவிர்க்கலாம் என்றும் இதற்காக இரண்டு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுவதாகவும் பிரான்ஸ் தெரிவித்து இருந்தது.
முதலில் ரேடியேஷன் பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறி மழுப்பி வந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது மென்பொருள் அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்கள் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பிரான்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு ஏற்ப பிரான்சில் உள்ள ஐபோன் யூசர்களுக்கு நாங்கள் சாப்ட்வேர் அப்டேட் கொடுக்க உள்ளோம். பிரான்ஸில் ஐபோன் 12 தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸை தொடர்ந்து பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் ஐபோன் 12 மாடல்களினால் ஹெல்த் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டி தங்கள் கவலையை பகிர்ந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஐபோன் போன்களில் அதிக அளவு கதிர்வீச்சு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பியிருப்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications