கத்தாரில் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்.. 11 விமானங்கள் ரத்து
தோஹா: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார். ஆனால் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரான் தாக்குதலின் எதிரொலியாக வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. இதனால், வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் உச்சமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது என்று கூறி கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது.

இரு நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன. இதைத்தொடர்ந்து, இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளை வீசி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று டிரம்ப் தெரிவித்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அல்-உதெய்த் விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஆனால், இந்த தாக்குதலை கத்தார் சமாளித்துவிட்டதாகவும் பெரிய அளவு பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போர் தொடரும் நிலை உள்ளது. இந்நிலையில், போர் காரணமாக வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களுடைய வான்வெளியை மூடியுள்ளன. வான்வெளி மூடப்பட்டதையடுத்து, துபாய், குவைத், தோஹா, அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 6 விமானங்கள் மற்றும் அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்தாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து தோஹா சென்ற மூன்று கத்தார் விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அதிகரித்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவிகிதம் சரிந்து, 68 டாலராகக் குறைந்துள்ளது. இந்த விலை, போர் தொடங்கிய நாளான ஜூன் 12 ஆம் தேதியில் இருந்ததைவிட மிகவும் குறைவாகும்.












Click it and Unblock the Notifications