ஓடி ஒளியல..பதுங்கி பாயும் ஈரான்! இஸ்ரேல் மீது மீண்டும் அட்டாக்? வெளியே வந்த ’சிங்கம்’ அயதுல்லா கமேனி
தெஹ்ரான் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலால் கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து பதுங்கி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், நேற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய கமேனி இஸ்ரேலுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான பேஜர், தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானை சுற்றிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தரைப்படை மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து லெபனானுக்கு ஆதரவாக ஏமன் நாட்டிலுள்ள ஹவுத்தி போராளி குழுவினர் இஸ்ரேலுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டின் முக்கிய வணிக மையங்கள், தலைமையகங்கள் ,துறைமுகங்கள், விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் ஆதரவாக சிரியாவில் இருக்கும் ஷியா போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக களம் இறங்கின.
அவர்களுக்கு சிரியாவின் அதிபர் ஆசாத், ஈரான் ராணுவம் ஆதரவளித்தது. இதன் காரணமாக லெபனான், காசா, சிரியா ஏமன் ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் சண்டை போடுவதோடு பலமுனை தாக்குதலை எதிர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலும் அந்நாடுகள் மீது தாக்குதலை தொடரும் நிலையில் ஹமாஜின் மூத்த தலைவர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவரது மகள், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இருந்த நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. குறிப்பாக போராளி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிடிக்ஸ் ஏவுகணைகளை வீசியது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என கூறப்படுகிறது.
இதற்கான வியூகங்களை அமைக்கும் பணியில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி பயந்து போய் பதுங்கி உள்ளதாக மேற்கத்திய செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் மேற்கத்திய ஊடகங்களில் பொய் செய்திகளை உடைத்து தகர்க்கும் வகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மோசல்லா தர்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டுத் தொழுகையில் ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. அப்போது இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்தது சிறிய தண்டனை ஏவுகணை தாக்குதல் தான் எனவும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அடையாள இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமானோர் அவரது புகைப்படங்களை ஏந்தி அமைதி ஊர்வலம் சென்றனர். தற்போது போர் உள்ளிட்ட சூழல் காரணமாக நஸ்ரலாவின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்த பிறகு அவரது உடல் உரிய மரியாதை உடன், நபிகள் நாயகத்தின் பேரனின் உடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications