இந்திய கப்பலை தாறுமாறாக சுட்ட ஈரான்.. ஹார்முஸில் 20 லட்சம் பேரல் எண்ணெய்யுடன் தப்பிய டேங்கர்
தெஹ்ரான்: உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு திடீரென வெடித்துள்ள துப்பாக்கிச் சூடு அந்த பிராந்தியத்தை ஒரு போர் மண்டலமாகவே மாற்றியுள்ளது.. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் உட்பட இரு கப்பல்கள் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலைமை இன்னும் சீராகவில்லை.. தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் கூட சிறு சிறு தாக்கல்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் எப்போது வேண்டும் என்றாலும் முழு வீச்சிலான போர் வெடிக்கும் என்ற ஒரு ஆபத்தான சூழலே நிலவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் வளைகுடா நாடுகளை உற்றுக் கவனித்து வருகிறது.

துப்பாக்கிச் சூடு
இதற்கிடையே இன்றைய தினம் அங்கு நிலைமை திடீரென கையைவிட்டுப் போவது போல மாறியது. இந்தியாவைச் சேர்ந்த டேங்கர் கப்பல் உட்பட இரு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சன்மார் ஹெரால்டு' (Sanmar Herald) என்ற பிரம்மாண்ட சூப்பர் டேங்கர் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது!
சுமார் 20 லட்சம் பேரல்கள் ஈராக் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இந்தியக் கொடியுடன் பயணித்த அந்த சூப்பர் டேங்கர், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றது. அப்போது அங்கு வந்த ஈரானின் புரட்சிகரப் படைக்குச் சொந்தமான இரண்டு படகுகள், எச்சரிக்கையை மீறி இந்தியக் கப்பலை நோக்கி சரமாரியாகச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியக் கப்பல் உட்பட அந்தப் பகுதியில் இருந்த பல வணிகக் கப்பல்கள் தங்களின் திசையை மாற்றி அவசரமாகத் திரும்பின. அதிர்ஷ்டவசமாக, இந்தியக் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கப்பலுக்கு அருகே மற்றொரு இந்தியக் கப்பல் இருந்ததாகவும் இருப்பினும் அந்த கப்பல் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர இந்த ஹார்முஸ் முக்கிய பாதையாக உள்ள நிலையில், அங்கு உள்ள குழப்பம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ்
நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்தது.. இருப்பினும், அப்போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரானுடனான ஒப்பந்தம் முடியும் வரை அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும்" என்று அறிவித்திருந்தார். இதற்கு நடுவே மீண்டும் ஈரான் யூடர்ன் போட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. "அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறிவிட்டது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தி இனி முழுமையாக மூடப்படும். எந்த நாட்டு வணிகக் கப்பல்களும் அனுமதி இன்றி நுழைய முடியாது" என ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே இந்தியக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
கச்சா எண்ணெய்
உலகத்தின் கச்சா எண்ணெய் தேவையில் 20% இந்தச் சிறிய வழித்தடம் வழியாகத்தான் செல்கிறது. இங்கே ஒரு துப்பாக்கிக் குண்டு வெடித்தால் கூட, உலகெங்கும் இருக்கும் பெட்ரோல் பங்கில் விலை எகிறும் என்பதுதான் எதார்த்தம். அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே நடக்கும் இந்த மோதலால்.. சம்பந்தமே இல்லாமல் இந்தியா போன்ற அப்பாவி நாடுகளே அதிகம் பாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications