ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு
டெல் அவிவ்: ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் வரிசையாகக் குறிவைத்துக் கொன்று வருகிறது. ஏற்கனவே பல முக்கிய தலைவர்களை இஸ்ரேல் கொன்றுவிட்ட நிலையில், ஈரானின் உளவு அமைச்சகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் உளவு துறை செயல்பாட்டை முடக்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த இஸ்ரேல், பல முக்கிய தலைவர்களைக் கொன்று வருகிறது. போர் ஆரம்பித்த முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகும் போர் தொடரும் சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் வரிசையாகக் குறிவைத்துத் தூக்கி வருகிறது.

உளவுத் துறை மாஸ்டர் மைண்ட்
இதற்கிடையே இப்போது ஈரானின் மற்றொரு டாப் தலைவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்தார். இரவோடு இரவாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்மாயில் கதிப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காட்ஸ் அறிவித்தார். இதுவரை ஈரான் தரப்பு அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
கதிப்பின் மரணத்தை அறிவித்த காட்ஸ், எல்லா பக்கத்தில் இருந்தும் இன்று முழுவதும் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது எனக் குறிப்பிட்டார். அதாவது மேலும் தாக்குதல்கள் தீவிரமடையும் என்பது போல அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் எப்படித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.. அடுத்துக் குறிவைக்கப்படுவது யார் என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை,
தொடர்ந்து வேட்டையாடுவோம்
அவர் மேலும், "அவர்கள் அனைவரையும் நாங்கள் தொடர்ந்து வேட்டையாடுவோம். எந்தவொரு ஈரானின் மூத்த அதிகாரியையும் தாக்கி அழிக்க ராணுவத்திற்குக் கூடுதல் அனுமதி தேவையில்லை என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எங்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளார்" என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் குறிப்பிட்டார்.
3வது தலைவர்
கடந்த இரண்டு நாட்களில் கொல்லப்பட்ட மூன்றாவது உயர்மட்ட ஈரான் தலைவர் கதிப் ஆவார். முன்னதாக செவ்வாய்க்கிழமை, இஸ்ரேல் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் ஈரானின் புரட்சிகரப் படையின் பசிஜ் படைப்பிரிவு தலைவர் கோலாம்ரெசா சுலைமானி ஆகியோரைத் இஸ்ரேல் கொன்று இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது இஸ்மாயில் கதிப்பும் கொல்லப்பட்டுள்ளார்.
யார் இவர்
ஈரானின் முக்கிய அமைச்சரான இஸ்மாயில் கதிப் ஒரு ஷியா மதகுரு ஆவார். அவர் ஈரானின் நீதித்துறை மற்றும் உளவுத்துறை அமைச்சகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இவர் 1980களில் நடந்த ஈரான்- ஈராக் போரில் புரட்சிகரப் படையில் சேவை செய்து, போரில் காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க டிரஷெரி துறை 2022இல் தான் இஸ்மாயில் கதிப் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரானின் உளவுத்துறை சைபர் தாக்குதலை நடத்தியதாகவும் அதன் காரணமாகவே ஈரான் உளவுத் துறையின் அமைச்சர் என்ற முறையில் கதிப் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. ஈரான் அரசுக்கு ஆதரவாக இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான அல்பேனிய அரசு வலைத்தளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் அரசு தகவல்களைக் கசியவிட்டதாகவும் ஈரான் உளவுத்துறை மீது அப்போது அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications