"ஈரான் எண்ணெய் கப்பல் எங்கள் நாட்டுக்கு வரும்.. முடிந்ததை பாருங்க".. பிடனுக்கு ஹெஸ்பொல்லா சவால்!
பெய்ரூட்: ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் லெபனான் நாட்டிற்கு வரும், இதை அமெரிக்கா தடுக்க முடியாது என்று ஹெஸ்பொல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வென்றுள்ள நிலையில் தற்போது லெபனான் ஹெஸ்பொல்லா இயக்கம் அமெரிக்காவிற்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி வருகிறது. தங்கள் நாட்டில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாட்டை தீர்க்க ஹெஸ்பொல்லா இயக்கம் ஈரானின் உதவியை நாடியுள்ளது.
ஹெஸ்பொல்லா போல நாங்களும் அரசியல் இயக்கம்தான், நாங்கள் தீவிரவாத இயக்கம் கிடையாது என்று தாலிபான்கள் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. தற்போது அதே ஹெஸ்பொல்லா இயக்கம் அமெரிக்காவிற்கு எதிராக மத்திய தரைக்கடல் பகுதியில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. அமெரிக்காவிற்கு ஹெஸ்பொல்லா கொடுத்து இருக்கும் வார்னிங் குறித்து பார்க்கும் முன் ஹெஸ்பொல்லா குறித்தும், லெபனானில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு குறித்தும் சின்ன இன்ட்ரோ பார்த்துவிடலாம்.
ஹெஸ்பொல்லா இயக்கம் 1980களில் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த காலத்தில் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிர்க்கும் விதமாக தோன்றிய இயக்கம்தான் ஹெஸ்பொல்லா. ஆயுதம் தாங்கிய இயக்கமான ஹெஸ்பொல்லா அமைப்பு ஷியா இஸ்லாமியர்களை கொண்டது. தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பில் கடுமையான நிலைப்பாடுகளை கொண்டு உள்ளது.

அரசியல்
ஹெஸ்பொல்லா இயக்கம் தீவிரவாத அமைப்பு கிடையாது. இது அரசியல் அமைப்பு ஆகும். தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள் லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறிய பின் அரசியல் இயக்கமாக மாறியது. இப்போதும் ஹெஸ்பொல்லா ஆயுத பயிற்சிகளை தொடர்ந்தாலும் லெபனான் நாட்டு அரசியலில் முக்கிய கட்சியாக அவர்கள் வலம் வருகிறார்கள். ஆளும் கட்சியின் ஆட்சிகளில் கூட இதற்கு முன் இவர்கள் பங்கு வகித்துள்ளார். இப்போதும் கூட லெபனான் நாட்டு நாடாளுமன்றத்தில் வீட்டோ அதிகாரம் கொண்டு இருக்கும் கட்சியாக ஹெஸ்பொல்லா இருக்கிறது.

அமெரிக்க எதிர்ப்பு
அமெரிக்க எதிர்ப்பு காரணமாக சிரியாவிலும் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஹெஸ்பொல்லா இயக்கம் போராடி வருகிறது. இஸ்ரேலில் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான ஹெஸ்பொல்லாவிற்கு சவுதி உள்ளிட்ட சன்னி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஹெஸ்பொல்லா இயக்கத்திற்கு லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே மத்திய தரைக்கடல் பகுதியில் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது.

ஆதரவு
இந்த நிலையில்தான் தற்போது லெபனானில் கடுமையான பெட்ரோல், டீசல் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் பெட்ரோல், டீசலுக்காக பங்குகளில் பல மணி நேரங்கள் லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் இல்லாமல் பல மின் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் இதனால் இயங்காமல் மூடப்பட்டு இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குவதற்கு கூட மக்கள் பல மணி நேரங்கள் காத்திருக்கும் கொடுமை அங்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இதனால் முடங்கி உள்ளனர். ராணுவ வீரர்கள் பெட்ரோல் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர்.

லெபனான் அரசு
லெபனான் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா இருப்பதால் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அந்த நாட்டிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வது இல்லை. பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் லெபனானை கைவிட்டு விட்டது. இதனால் அந்த நாட்டின் எண்ணெய் கையிருப்பு காலியாகிவிட்டது. இது பொருளாதார ரீதியாகவும் அவர்களை பாதித்துள்ளது. மறைமுக அழுத்தம் காரணமாக லெபனான் எண்ணெய் இன்றி பெரும் இழப்பை சந்திக்கும் கொடுமைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் லெபனான் நாட்டிற்கு ஈரான் உதவ முன் வந்தது. லெபானின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஹெஸ்பொல்லா இயக்கத்திற்கு ஈரான் உதவ முன் வந்தது.

எண்ணெய்
அதன்படி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக கடல் மூலம் ஈரானில் இருந்து லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா இயக்கத்திற்கு எண்ணெய் வர உள்ளது. இதை அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் ஈரானின் எண்ணெய் எங்கள் நாட்டிற்குள் வரும், உங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த எண்ணெய் எங்கள் கடல் பகுதிக்குள் நுழைந்ததும் அது எங்கள் நாடடிற்கு சொந்தமானதாக மாறிவிடும் என்று ஹெஸ்பொல்லா இயக்க தலைவர் சயீத் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கப்பல்
இந்த கப்பலுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாது என்று நம்புகிறோம். நாங்கள் யாரிடமும் மோதலுக்கு செல்லவில்லை. எங்கள் மக்களை பாதுகாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்காவோ, இஸ்ரேலோ என்ன முயற்சி செய்தாலும், அந்த கப்பல் எங்கள் எல்லைக்குள் வந்து சேரும் என்பது மட்டும் உறுதி. லெபனான் ராணுவம் பெட்ரோல் நிலையங்களை கைப்பற்றும் அளவிற்கு எங்கள் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. ஈரான் கொடுக்கும் எண்ணெய் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்று ஹெஸ்பொல்லா இயக்க தலைவர் சயீத் ஹாசன் தெரிவித்துள்ளார்.

எப்படி இருக்கிறது
தாலிபான்களின் வெற்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இடையே புதிய வேகத்தை கொடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு அஞ்ச வேண்டியது இல்லை. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நம்முடன் நிற்கும் என்று இந்த இயக்கங்கள் களமிறங்க தொடங்கி உள்ளன. இது ஒருவகையில் சர்வதேச அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில், எண்ணெய் வள நாடுகளில் இதனால் பெரிய அரசியல் மாற்றங்களை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications