மிக பெரிய ட்விஸ்ட்.. ஈரான் அதிபராகும் சீர்திருத்தவாதி பெசெஷ்கியன்! அடுத்து வரும் மேஜர் மாற்றங்கள்
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் பழமைவாதியாக அறியப்படும் சயீத் ஜலிலியை வீழ்த்தி மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஈரான் தேர்தல்: இந்தத் தேர்தலில் மொத்தம் 3 கோடி பேர், அதாவது வாக்களிக்க தகுதியானவர்களில் 49.8% பேர் வாக்களித்துள்ளனர். அதில் மசூத் பெசெஷ்கியனுக்கு ஆதரவாக 1.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதேநேரம் சயீத் ஜலிலிக்கு ஆதரவாக 1.3 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதேநேரம் சுமார் 6 லட்சம் வாக்குகள் செல்லாத வாக்குகளாக இருந்ததாகவும் அந்நாட்டின் உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய ஈரானை உருவாக்க தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பெசெஷ்கியன், "நாங்கள் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டுவோம்.. அனைவரையும் அரவணைத்து செல்வோம். நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள்; நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரது பங்களிப்பும் தேவை" என்று கூறினார்
சீர்திருத்தவாதி: அதிபராக தேர்வாகியுள்ள பெசெஷ்கியன் சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். இவரது ஆட்சியில் பல முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் நாட்டை பொறுத்தவரை அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி கடைசியாக அங்கு கடந்த 2021ம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் மிக தீவிர பழமைவாதியான இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றிருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவரே அதிபர் பதவியில் இருந்து வந்தார். இந்தச் சூழலில் தான் இவர் கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
முன்கூட்டியே தேர்தல்: அதிபர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டது. ஈரான் நாட்டை பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலில் 50% மேல் வாக்குகளை பெற்றவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது நமது நாட்டில் முதலில் வந்தவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். மற்ற வேட்பாளர்களை காட்டிலும் ஒரு வாக்காக இருந்தாலும் சரி ஓராயிரம் வாக்காக இருந்தாலும் சரி.. அதிக வாக்கு பெற்றவரே வென்றவராக அறிவிக்கப்படுவார்.
"கட் ஆன சிக்னல்.." ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து.. உண்மையில் என்ன காரணம்! பரபர
ஆனால், ஈரானில் தேர்தல் முறை சற்று வித்தியாசமானது. அங்கு அதிக வாக்குகளை வாங்கியிருந்தாலும் 50% மேல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அதாவது அதிபர் தேர்தலில் 4 பேர் போட்டியிடும் போது.. அதை முதல் சுற்று என கூறுகிறார்கள். அதில் யார் 50% மேல் வாக்குகளை பெறுகிறார்களோ அவர்கள் மட்டுமே வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
ஒரு வேலை யாரும் 50% வாக்குகளை பெறவில்லை என்றால்.. இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடக்கும். அதில் முதல் சுற்றில் டாப் 2 இடத்தில் வந்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்... அதில் யார் 50% மேல் வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வெற்றி: இந்த முறை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்து இருந்தது. இதனால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இரண்டாவது சுற்று தேர்தலில் அதிக வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதலாம் சுற்றில் மசூத் பெசெஷ்கியன் 44.76% வாக்குகளையும் இப்ராஹிம் ரைசி 40% வாக்குகளையும் பெற்றார். இதையடுத்து நடந்த 2ம் சுற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், 54% வாக்குகளை பெற்று மசூத் பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.
பல்வேறு காரணங்கள்: ஈரான் நாட்டில் இப்போது மிகவும் சிக்கலான சூழல் நிலவுகிறது.. காசா யுத்தம், ஈரானின் அணுசக்தி திட்டத்தால் உலக நாடுகளின் அதிருப்தி, ஈரான் மீதான பொருளாதார தடைகள் என ஈரான் பெரும் சிக்கலில் உள்ளது. இது தவிர முந்தைய அதிபர் இப்ராஹிம் ரைசியின் பழமைவாத கொள்கைகளாலும் ஈரான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலில் தான் தேர்தலில் முற்போக்கு வேட்பாளராக அறியப்பட்ட மசூத் பெசெஷ்கியனை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். விரைவில் ஈரான் நாட்டில் பல முக்கிய சீர்திருத்தங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications