இஸ்ரேலிடம் சரணடைய மாட்டோம்.. அமெரிக்கா தலையிட்டால் அவர்களையும் தாக்குவோம்! ஈரான் தலைவர் கமேனி சூளுரை
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. ஈரான் உடனடியாக சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயந்து சரணடைய மாட்டோம் எனக் கூறியுள்ள ஈரான், இந்த போரை உறுதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கில் போர் வெடித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் என இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சைரிங் லயன் என்ற தாக்குதல் மூலம் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே மோதல் வெடித்துள்ளது.

டிரம்ப்
இரு நாடுகளும் தற்போது மோதலை நிறுத்திக் கொள்வது போலத் தெரியவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தடாலடியாக ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது ஈரானின் உயர்மட்ட தலைவர் கமேனி பதுங்கியுள்ள இடம் தங்களுக்குத் தெரியும் என்றும் இருந்த போதிலும் அவர் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என டிரம்ப் கூறியிருந்தார். மேலும், சரணடைவது மட்டுமே இப்போது ஈரானுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் என்பது போலவும் கூறியிருந்தார்.
ஈரான் பதிலடி
இதற்கிடையே டிரம்பிற்கு ஈரான் இப்போது பதிலடி கொடுத்துள்ளது. யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயந்து சரணடைய மாட்டோம் எனக் கூறிய கமேனி, ஈரான் மீது திணிக்கப்பட்ட போரை உறுதியாக எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்கா தலையிட்டால் சரி செய்ய முடியாத சேதத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்றும் தவறு செய்த இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் தொலைக்காட்சியில் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் கமேனி உரையாற்றிய நிலையில், அப்போது அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். கமேனி மேலும் கூறுகையில், "ஈரான் மற்றும் அதன் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேச மாட்டார்கள். ஈரானியர்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.
பதிலடி மிக மோசமாக இருக்கும்
அமெரிக்காவின் எந்தவொரு ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஈரான் மீது திணிக்கப்படும் போரை உறுதியாக எதிர்ப்போம். அதேபோல், வலுக்கட்டாயமாகச் சரணடையச் சொன்னால் அதையும் உறுதியாக எதிர்ப்போம்.. எந்தவொரு நிர்ப்பந்தத்திற்கும் இந்த நாடு அடிபணியாது" என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் ஈரான் மோதல்
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த வெள்ளிக்கிழமை முதலே நடந்து வருகிறது. அமெரிக்கா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையை ஈரான் இறுதி செய்யாத நிலையில், இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற இந்த தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு தரப்பிலும் இழப்புகள் உள்ளன என்ற போதிலும், ஒப்பீட்டளவில் இஸ்ரேல் வசமே இழப்புகள் அதிகமாக உள்ளன. இருப்பினும், ஈரானும் கூட தாக்குதலை விடாமல் தொடர்ந்தே வருகின்றன.
இந்த தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா இதுவரை தலையிடவில்லை. இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்தாலும் கூட அமெரிக்கா இதில் நேரடியாக இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications