திடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி
திடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி
தெஹ்ரான், ஈரான்: மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார்... ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இதனை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
Recommended Video
ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே... ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அவரை கருதுகின்றன... அதனால் "ஈரான் அணு குண்டின் தந்தை" என்றும் அவரை வர்ணித்தனர்.
இந்நிலையில், மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே, விஞ்ஞானி காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு
பிறகு திடீரென அவரது காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட ஆரம்பித்துவிட்டனர். இதில் துப்பாக்கி குண்டு அவரை துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.. உயிருக்கு போராடிய பக்ரிசாதேவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
படுகாயம்
இந்த சம்பவம் ஈரானையே உலுக்கி எடுத்து வருகிறது.. ஏற்கனவே ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த கவலையில் இருக்கும்போது, இந்த படுகொலை மேலும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பக்ரிசாதேவின் செக்யூரிட்டியும் படுகாயம் அடைந்தார்.
இஸ்ரேல்
இப்படித்தான், 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் 4 ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர்.. இந்த கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டி இருந்தது. இப்போது இன்னொரு விஞ்ஞானியும் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திலும் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பிடன், வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ள நிலையில், ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட வைப்பதற்கான அவரது முயற்சிகள், இந்த படுகொலையால் வீணாகலாம் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது! ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.