அமெரிக்காவுடன் மீண்டும் வெடிக்கும் போர்? ஈரான் பகீர் எச்சரிக்கை! டிரம்ப் பேச்சால் உச்சக்கட்ட பதற்றம்
தெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் நிற்கின்றன. இதனால் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே மீண்டும் போர் வெடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையேயான போர் கடந்த சில வாரங்களாகவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற ஒரே சூழலே இருக்கிறது. பேச்சுவார்த்தைகளில் இதுவரை நல்ல செய்தி கிடைக்கவில்லை.

ஈரான்
இதற்கிடையே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த உலக நாடுகளுக்கு, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் கவலையை அளித்துள்ளன. ஈரானின் புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இரு தரப்பிலும் வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
போர் மீண்டும் தொடரும்
இதற்கிடையே ஈரான் ராணுவத் தலைமையகத்தின் துணை அதிகாரி முகமது ஜாபர் அசாதி, அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எந்தவொரு உடன்படிக்கையையும் பின்பற்றுவதில் உறுதியாக இல்லை என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் அனைத்தும் எண்ணெய் விலை குறைவதைத் தடுக்கவும், தாங்கள் சிக்கியுள்ள இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளப்படும் நாடகங்களாக மட்டுமே இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் எந்தவொரு "முட்டாள்தனமான" செயலுக்கும் பதிலடி கொடுக்கத் தங்கள் படைகள் தயார்நிலையில் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
என்ன நடந்தது!
முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் புதிதாக ஒரு முன்மொழிவை அனுப்பி இருந்தது. இருப்பினும், அதை அமெரிக்கா ஏற்கவில்லை. ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்த அதிபர் ட்ரம்ப், அவர்கள் கேட்கும் சில சலுகைகளைத் தன்னால் ஒருபோதும் ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் தலைமை ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் இரண்டு மூன்று குழுக்களாகச் சிதறிப் போயுள்ளதாக ட்ரம்ப் சாடியுள்ளார். குறிப்பாக ஈரான் பற்றி பேசும்போது, "முட்டாள்கள் கையில் அணு ஆயுதம் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது; அதற்காகவே இந்தப் போர்" என அவர் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்க விதிகளின்படி ஒரு அதிபரால் 8 வாரங்களுக்கு மேல் தன்னிச்சையாகப் போரைத் தொடர முடியாது. அப்படித் தொடர வேண்டும் என்றால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. அதன்படி இந்த காலக்கெடு 1ம் தேதியுடன் நிறைவடைந்தது. டிரம்ப் தரப்பிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காத நிலையில், நிலைமையைச் சமாளிக்க வேறு வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகிறது. அதாவது போர் சில வாரங்களாக நடக்கவில்லை என்பதால் அந்த காலகட்டத்தைச் சேர்க்கக்கூடாது என்றும் அதன்படி பார்த்தால் இன்னும் 8 வாரங்கள் வரவில்லை என்றும் டிரம்ப் தரப்பு சொல்லி வருகிறது.
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் போர் தொடரவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லி ஈரான் அதிர வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடியாகப் போர் தொடங்கினால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலை மேலும் புதிய உயரத்திற்குப் பறக்கும் என்றே அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications