ஒரே பரபரப்பாவே இருக்கு! ஈரான் - அமெரிக்கா எப்போது பேசும்? உற்று நோக்கும் உலக நாடுகள்! நடக்குமா?
தெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்ற நிலை இன்னும் குறையாத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய முடிவும் எட்டப்படாததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா, நடந்தால் எப்போது நடைபெறும் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை எனவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிச்சயமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பும் உடனடியாக சந்தித்து பேசுவதற்கு முன், முதலில் சில அடிப்படை அம்சங்களில் ஒரே கருத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது.
ஈரான் அமெரிக்கா
குறிப்பாக, இரு நாடுகளும் ஏற்கக்கூடிய ஒரு புரிந்துணர்வு திட்டம் உருவாகாமல் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு செல்ல விரும்பவில்லை என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வியடையும் சூழ்நிலை இருந்தால், அது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக கூறப்படுகிறது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
சமீபத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை பலரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், இறுதியில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாததால் மீண்டும் பதற்ற நிலை உருவானது. அமெரிக்கா முன்வைத்த சில கடுமையான நிபந்தனைகளே உடன்பாடு எட்டப்படாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு எதிரான எந்த நிபந்தனைகளையும் தாங்கள் ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஹோர்மூஸ் நீரிணை
இதற்கிடையில் கடல் போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளும் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. முக்கியமான எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் நீரிணை வழித்தடத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் எண்ணெய் விலைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த கடல் வழித்தடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பல் மீது துப்பாக்கிச்சூடு
இதனால் அந்த வழியாக பயணம் செய்யும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்கள் கூட எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு இந்திய கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்த கப்பலுக்கும் அதிலிருந்த பணியாளர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஒரு நிம்மதியான தகவலாக பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம்
ஈரான்-அமெரிக்கா இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. இரு தரப்பும் முதலில் பரஸ்பரம் ஏற்கக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த முயற்சி வெற்றியடையும் வரை புதிய பேச்சுவார்த்தைக்கு தேதி அறிவிக்கப்படாது என்பதால், உலக நாடுகள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பேச்சுவார்த்தை நடந்தாலும் அது போர் நிறுத்தம் தொடர்பாக இருக்குமா? அல்லது பிரச்சனை வீரியத்தை மேலும் அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications