ஈரான் இனி அணுஆயுதம் தயாரிக்க முடியாது? உயிர்நாடியில் விழுந்த அடி.. சேதமான அணுசக்தி நிலையம்
டெஹ்ரான்: ஈரானில் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை கடந்த ஆண்டு அமெரிக்கா 'பங்கர் பஸ்டர்' குண்டுகளால் தாக்கியது. அதன்பிறகு இந்த மையத்தை ஈரான் புனரமைத்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து இந்த மையத்தை குண்டுவீசி தாக்கி சேதப்படுத்தி உள்ளது. இதனால் ஈரானால் இனி அணுஆயுதம் தயாரிக்க முடியுமா? என்பது பற்றி சர்வதேச அணுசக்தி முகமை விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது வரை இருநாடுகளும் தரைவழி தாக்குதலை தொடங்கவில்லை. மாறாக 4வது நாளாக இருநாடுகளும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி ஈரானை பந்தாடி வருகிறது.
ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி உள்பட முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதலை இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்தி வருகிறது.

இதனால் ஈரானில் அணுஆயுதம் தயாரிப்புக்கு உதவும் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் (Uranium Enrichment Facility) உள்பட 3 அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த ஆண்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கியது. அதன்பிறகு இந்த 3 மையங்களை ஈரான் புனரமைத்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி உள்ளது.
யுரேனியம் செறிவூட்டும் மையம் சேதம்
இந்த தாக்குதலையும், தாக்குதலில் பூமிக்கடியில் உள்ள ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த முகமை வெளியிட்டுள்ள செய்தயில், ''ஈரானில் பூமிக்கடியில் இயங்கும் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையம் நுழைவாயிலில் உள்ள கட்டடங்களுக்கு புதிய சேதம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய செயற்கைகோள் படங்கள் இந்த சேதத்தை உறுதிப்படுத்தி உள்ளன. இருப்பினும் இந்த சேதங்கள் அதன் நுழைவாயில் கட்டமைப்புகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
கதிர்வீச்சு இல்லை
தற்போதைய சூழலில் எந்தவித கதிர்வீச்சும் இல்லை. மேலும் யுரேனியம் செறிவூட்டும் பகுதிகளில் எந்த கூடுதல் சேதமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாத மோதலில் கடுமையாக சேதமடைந்த நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் உள்ளே வேறு எந்தக் கூடுதல் தாக்கமும் கண்டறியப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணுசக்தி மையங்களில் ஏதேனும் கசிவு உள்ளதா? என்பதை இந்த சர்வதேச அணுசக்தி முகமை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
செறிவூட்டும் மையத்துக்குள்...
இதன்மூலம் புதிய தாக்குதலிலும் ஈரானில் பூமிக்கடியில் உள்ள நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் நுழைவு வாயில் சேதமடைந்து இருந்தாலும் கூட செறிவூட்டும் மையம் அப்படியே உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தால் இனி யுரேனியத்தை ஈரானால் செறிவூட்ட முடியுமா? இல்லையா? என்பது பற்றி சர்வதேச அணுசக்தி முகமை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.
3 முக்கிய இடங்கள்
ஈரானை எடுத்து கொண்டால் அணுஆயுதம் தயாரிப்பதற்கு இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனையில் தான் கடந்த ஆண்டு 12 நாட்கள் ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடைசியில் அமெரிக்காவும் நுழைந்தது. ஈரானில் அணுஆயுதம் தயாரிக்க 3 முக்கிய மையங்கள் உள்ளன.
ஒன்று நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையம். 2வது ஃபோர்டோவில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் மையம். இதில் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையம் தான் பெரியது. மேலும் அணுஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு இந்த மையம் தான் உயிர்நாடியாக விளங்கி வருகிறது.
அதேபோல், 3வது இஸ்ஃபஹான் மையம். இது அணுசக்தி துறையை பலப்படுத்தும் மையமாக உள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சேமித்து வைக்கும் இடம் உள்பட பல்வேறு வசதிகள் இங்கு உள்ளது.
90% செறிவூட்ட வேண்டும்
இதில் நடான்ஸ், ஃபோர்டோவில் தான் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டப்படும். அதாவது தூய்மையாக்கப்படும். அணுஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியம் 90 சதவீதம் வரை தூய்மையாக இருக்க வேண்டும்.
தற்போது ஈரானிடம் 60 சதவீதம் தூய்மை (செறிவூட்டப்பட்ட) யுரேனியம் உள்ளது. இதனால் தான் கடந்த ஆண்டு இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்த 3 மையங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் 'அட்டாக்'கிற்கு உள்ளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications