ஈராக் உள்நாட்டுப் போர்: பாக்தாத்திலிருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா
பாக்தாத்: ஈராக்கில் அதிகரித்து வரும் பதட்டமான சூழ்நிலையையடுத்து தனது தூதர ஊழியர்களை பாக்தாத்திலிருந்து ஜோர்டானுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதலை தொடங்கினர். ஈராக்கின் மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா உள்ளிட்ட முக்கியமான நகர்களை கைப்பற்றிய அவர்கள், தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் கைப்பற்றிய நகரங்களை மீட்கவும் அரசுப்படைகள் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும் இந்த உள்நாட்டு போரில் தீவிரவாதிகளின் கையே ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அங்கு சண்டை நடைபெறுவதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அதன்படி அங்கு வசித்து வந்த சன்னி பிரிவினர் ஈராக்கின் கிழக்கு பகுதியிலும், ஷியா பிரிவினர் மேற்கு பகுதியிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனால் ஈராக்கில் உள்ள தங்கள் நாட்டு தூதரக ஊழியர்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனது 60க்கும் அதிகமான ஊழியர்களை பாக்தாத்திலிருந்து ஜோர்டானுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா. அதேபோல், சில தூதர ஊழியர்களை ஈராக்கில் உள்ள மற்ற நகரங்களான பஸ்ரா மற்றும் எர்பிட்டுக்கு செல்லவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
பாக்தாத்தில் தான் சுமார் ஐந்தாயிரம் ஊழியர்களைக் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய தூதரகத்தை அமெரிக்கா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications