ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி
பாக்தாக்: ஈராக் நாட்டில் பக்ரீத் பண்டிகை முந்தைய நாள் மாலை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாக் நகரில் அமைந்துள்ள மார்க்கெட் ஒன்றில் பக்ரீத் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
அந்தச் சமயத்தில் அங்கு திடீரென மிகப் பெரிய குண்டு வெடித்தது. பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.

ஈராக் குண்டுவெடிப்பு
கிழக்கு பாக்தாத் புறநகர்ப் பகுதியான சதர் நகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

சிறுவர்கள் பெண்கள் உயிரிழப்பு
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் எட்டு பேர் பெண்கள், ஏழு பேர் குழந்தைகள் ஆகும். ஈராக் நாட்டில் சமீப ஆண்டுகளில் நடந்து மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் உடல் பாகங்கள் அந்த மார்கெட் முழுவதும் சிதறி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களை அடையாளம் பணிகளிலும், பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் சிக்கல் நிலவுவதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

ஐஎஸ்ஐஎஸ்
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அபு ஹம்சா அல்-ஈராக்கி என்ற பயங்கரவாதி மூலம் தற்கொலைப் படைத் தாக்குதலாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் தங்கள் டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த சில கொரூர வீடியோக்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஈராக் அதிபர்
இந்தத் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். இதனை மன்னிக்க முடியாத கொடூரமான குற்றம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பக்தீத் பண்டிகைக்கு முன் அப்பாவி மக்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் பயங்கரவாதிகள் ஒரு நிமிடம் கூட பொதுமக்களை மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் சிறுவர்கள் கொல்லப்பட்டதை யுனிசெப் அமைப்பும் உறுதி செய்து, தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications