இந்துக்களுக்கு எதிரானவரா ஷேக் ஹசீனா? 2006ல் வங்கதேசத்தில் செய்தது என்ன? பற்றவைத்த பிஎன்பி
டாக்கா: ஒரு வன்முறையில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதால் மொத்த வங்கதேசமும் இந்துக்களுக்கு எதிரானது என கூறிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்துக்களுக்கு நண்பனாக செயல்படவில்லை எனக்கூறி கடந்த 2006ல் நடந்த சம்பவத்தை வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி விவரித்துள்ளார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக ஷேக் ஹசீனா உயிருக்கு பயந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தள்ளார்.

இதன்மூலம் கடந்த 2009 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசத்துக்கு இந்தியா அனுப்பி வைக்க வேண்டும். ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் நம் நாடு ஷேக் ஹசீனாவை பாதுகாப்பாக ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக செயல்பட்டது தான்.
இந்நிலையில் தான் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி - ஷேக் ஹசீனாவுக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களுக்கு ஆதரவானவர் இல்லை. அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி கூறுகையில், ‛‛ ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு இந்தியா ஆதரவாக இருந்தது. இப்போதும் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவான கதைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. உண்மையில் அவர்கள் வங்கதேசத்தில் வந்து உண்மை நிலையை அறிய வேண்டும். இப்போது வங்கதேச மக்கள் கடந்த கால தவறில் இருந்து பாடம் படித்து புதிய நாட்டை கட்டியெழுப்ப தயாராகிவிட்டனர். இந்த புதிய வங்கதேசத்துடன் இந்தியா சேர்ந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவில் பலரும் ஷேக் ஹசீனா இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்ற பொய்யை பரப்பி வருகின்றனர். ஷேக் ஹசீனா
கடந்த 2006ல் தீவிர வலதுசாரியான கெலாபத் மஜ்லிஷ் உடன் கூட்டணி அமைக்க கையெழுத்திட்டார். மேலும் மேலும் ஹெஃபாசாத்-இ-இஸ்லாமுடன் நெருக்கமாக இருந்தார். ஆனாலும் கூட மதசார்பற்ற அரசு என்பது அவர் பிம்பத்தை உருவாக்கினார். ஆனால் உண்மையில் அவர் இஸ்லாமியர்களை அவமதித்ததோடு, இந்துக்களுக்கும் தோழியாக செயல்படவில்லை.

வங்கதேசத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மக்களும் சமம். அனைவருக்கும் சம உரிமை என்பது உண்டு. இதனால் ஏன் பிரிவினையை உருவாக்க வேண்டும். நாங்கள் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதிக்கிறோம். ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பிறகு வன்முறை நடந்தது. இதில் சில அவாமி லீக் ( ஷேக் ஹசீனா கட்சி) தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். இதில் இந்துக்களும் அடங்கும். இந்த சம்பவத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
இந்தியாவிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடக்கவில்லையா? ஒரு சம்பவத்தை வைத்து மொத்த நாட்டையும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறிவிட முடியாது. இந்த சம்பவத்தின் மூலம் வங்கதேசத்தை குற்றம்சாட்டுபவர்களுக்கு எங்களின் நாட்டை பற்றிய சரியான புரிதல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை தான் விரும்புகிறோம். இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications