எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் அமெரிக்கா! இஸ்ரேல் ஹமாஸ் மோதல் பெரிதாகும் ஆபத்து.. பகீர் பின்னணி
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கே சண்டை தீவிரமாக அமெரிக்காவின் செயல்பாடுகளே காரணம் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான சண்டை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இப்போது இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே இரவில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி அங்கே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் சண்டை: இதில் விஷயம் என்னவென்றால் காசாவில் இருக்கும் ஹமாஸ் படை மட்டுமின்றி மற்ற இலக்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது அண்டை நாடான சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கு பணியாற்றி வந்த அப்பாவி தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இதனால் அங்குள்ள விமான நிலையத்தில் விமானச் சேவையும் கூட சில மணி நேரம் முடங்கியதாக சிரியா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த சனிக்கிழமை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்கு எல்லையிலும் ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி சுற்றிலும் பல பிரச்சினைகள் இருந்தாலும் கூட ஹமாஸை முழுமையாக வேட்டையாட வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது.
இஸ்ரேல் திட்டம்: இப்போது வரை காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தனது வீரர்களை காசாவுக்குள் அனுப்ப தயாராகி வரும் நிலையில், அதற்கு முன்பு வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனது படை வீரர்கள் கசவுக்குள் இறங்கும் போது முற்றிலுமாக தங்களுக்குச் சாதகமான ஒரு சூழல் இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் நினைக்கிறது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், "சிறந்த ஒரு சூழலில் எப்போது நிலைமை எங்களுக்குச் சாதகமாக இருக்கிறதோ.. அப்போது தான் இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. மேலும், இன்று முதல், நாங்கள் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
அமெரிக்கா: இதன் மூலம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. மேலும், இந்த இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் எங்கு மத்திய கிழக்குப் பகுதி முழுக்க பரவக்கூடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. காசா மட்டுமின்றி பல இடங்களில் இஸ்ரேல் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவும் அதிகளவில் ராணுவத் தளவாடங்களை அனுப்பியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவும் அதிகளவில் ராணுவத் தளவாடங்களை அனுப்பி வருகிறது. இது இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள என்று கூறப்பட்டாலும் கூட இதுவே மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியா நிலைப்பாடு: அதேநேரம் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கும் உதவி குவிந்து வருகிறது. காசாவில் இருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா சுமார் 6.5 டன் மருத்துவ உதவிகளையும் 32 டன் நிவாரணப் பொருட்களையும் அனுப்பியுள்ளது.இந்திய விமானப்படையின் சி-17 விமானத்தில் இவை எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து அவை காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை சுட்டிக்காட்டிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய கிழக்கில் நிலைமை இன்னும் தெளிவாக இல்லை என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications