பஹ்ரைனில் ஐஎஸ்எப் நடத்திய மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
மனாமா: தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் சமூக அமைப்புகள் கலந்து கொண்ட இந்தியன் சோஷியல் ஃபோரமின்(தமிழ்) மாபெரும் "மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி" பஹ்ரைனில் நடந்தது.
இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவானது 10-06-2017 அன்று மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் உள்ள ஹோட்டல் சவுத் பார்க் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, ம.ம.க, நாம் தமிழர், இ.யூ.மு.லீ. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பாரதி தமிழ் சங்கம், தமிழ் மன்றம், ஜமாத்தே இஸ்லாமி(தமிழ்), டிஸ்கவர் இஸ்லாம்(தமிழ்) உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் பலவும், மேலும் சாதி மத பேதமின்றி திரளான தமிழ் மக்களும் கலந்து கொண்டனர்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் அப்துல் கரீம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இஃப்தாருக்குப் பின் அரங்கத்திலேயே தொழுகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தலைவர்கள் சிறிது நேரம் மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் மதநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்கும் விதமாக மத்திய ப.ஜ.க. அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், அதை முறியடிப்பதற்கு அனைத்து சமூக மக்களும் ஒன்றாக பாடுபட வேண்டும் எனவும் முதலில் உரையாடிய பேச்சாளர்கள் பேசினார். பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் சிறப்பான இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் இனிதாக நிறைவுபெற்றது.