ரஷ்ய விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவிப்பு
பீஜிங்: எகிப்தின் சினாய் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியான நிலையில், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
எகிப்தின் செங்கடலை ஒட்டிய ஷாம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு இன்று 224 பயணிகளுடன் ரஷ்யாவுக்கு சொந்தமான கோகலிமாவியா நிறுவன விமானத்தின் ஏர்பஸ் ஏ-321 விமானம் புறப்பட்டுச் சென்றது.

எகிப்தின் ஷினாய் தீபகற்ப பகுதியில் அந்த விமானத்தின் தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து துருக்கி நாட்டு விமான நிலையத்தை விமானிகள் தொடர்பு கொண்டதாக தகவல்கள் முதலில் வெளியாகின. மேலும் ரஷ்யா நோக்கி அந்த விமானம் பாதுகாப்பாக வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், "ரஷ்யா விமானம் ஷினாய் தீபகற்ப பகுதியில் நடுவானில் வெடித்து சிதறிவிட்டது. இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இதனால் விமானம் விபத்தில் சிக்கியதா? இல்லையா என்ற குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் ஷினாய் தீபகற்ப பகுதியில் நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் வந்த சில மணி நேரங்களில் அடுத்த திருப்பமாக, விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. சமீபகாலமாக ஐஎஸ் தீவிரவாதிகள் மீது குண்டுவீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அதற்கு பழிவாங்க தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications