100 பேர் கொண்ட 2வது அமெரிக்க 'பலி' பட்டியலை வெளியிட்டது ஐஎஸ்ஐஎஸ்
டமாஸ்கஸ்: அமெரிக்க ராணுவ வீரர்களில் கொல்லப்பட போகிறவர்கள் என 100 பேரின் பெயர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வருகிறது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம். உலகையே அச்சுறுத்தி வரும் இந்த இயக்கத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் ஆட்கள் வந்து சேர்ந்தபடி உள்ளனர். இதனால் அந்த இயக்கம் வேகமாக பலம் பெற்று வருகிறது.

இதேபோல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் உள்ள பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்று அட்டூழியம் செய்து வருகின்றனர்.
எனவே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கடத்தல் பிரிவு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 100 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைக் கடத்திக் கொல்லப்போவதாக அந்த அமைப்பு மிரட்டியுள்ளது.
ஏற்கனவே, இந்தாண்டு மார்ச் மாதம் இதே போல் 100 பேர் கொண்ட பட்டியலை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர். அந்தப் பட்டியலில் உள்ளவர்களை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்கள் கொல்ல வேண்டும் எனவும் தீவிரவாதிகள் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications