ஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டூழியம்: கைதியை சவக்குழி தோண்ட வைத்து கொன்று புதைத்த கொடூரம்
சிரியா: ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறைக்கைதியை சவக்குழியை தோண்டவைத்து அதிலேயே கொன்று புதைத்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவையும் வெளியிட்டு காண்பவர்களின் நெஞ்சை உறையவைத்துள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
ஈராக் மற்றும் சிரியாவின் ஒருசில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர். சிறைபிடித்துச் சென்றுள்ள கைதிகளை மிகவும் கொடூரமாக கொலை செய்யும் அவர்கள், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு சர்வதேச சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது சிரியா உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, அவரை புதைக்கும் சவக்குழியை அவரை வைத்தே தோண்டச் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பேசிய அந்த சிரியா கைதி தான் செய்த தவறு குறித்து பேசுகிறார். பின்னர், தனது விதியை எண்ணி சோகத்துடன் பாலைவனத்தில் நடந்து செல்லும் அவர் ஆரஞ்சு வண்ண உடையணிந்திருக்கிறார். தீவிரவாதிகள் உத்தரவின்படி தனக்கான சவக்குழியை மண்வெட்டி கொண்டு தானே தோண்டுகிறார்.
அப்போது ஒரு ட்ரக் வருகிறது. அதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி பறக்கிறது. பின்னர், டிரக்கில் வரும் தீவிரவாதிகள் அவரை அந்த குழியின் அருகில் மண்டியிட வைத்து மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர். அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது. பின்னர் கைதி தோண்டிய குழியிலேயே புதைத்துவிட்டு சென்றுவிட்டனர் தீவிரவாதிகள். இந்த வீடியோகாட்சி காண்பவர்களின் நெஞ்சை உறையவைக்கிறது.
ஏற்கனவே அமெரிக்க செய்தியாளர்களை தலையை துண்டித்து கொன்று அதை வீடியோவாக வெளியிட்டு அச்சுறுத்திய நிலையில் சிரியா உளவாளியை கொன்று வீடியோ வெளியிட்டுள்ளனர் தீவிரவாதிகள்.