பிஞ்சுக் குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்த ஐஎஸ் அரக்கன்கள்
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈவு, இரக்கமின்றி ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி அதை வெடிக்கச் செய்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று செய்து காண்பித்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்தனர்.
இதில் குழந்தை உடல் சிதறி பலியானது. அந்த குழந்தையின் தந்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலரை கொலை செய்தாராம். அதனால் அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் கொலை செய்தனர். இந்நிலையில் அவரின் செயலுக்கு பழிவாங்க அவரின் குழந்தையை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்த கொடூரத்தை செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
ஒரு குழந்தையை தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளது உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த குழந்தையின் தாய் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
முன்னர் தீவிரவாதிகள் சிறுவர்கள் கையில் துப்பாக்கிகளை கொடுத்து பிணையக் கைதிகளை கொலை செய்ய வைத்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா முஸ்லீம்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.