ஈராக்கில் மதம் மாற மறுத்த 80 யாஸிதிகள் சுட்டு படுகொலை- பகீர் தகவல்!!
மொசூல்: ஈராக்கில் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்த யாஸிதி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 80 பேரை சன்னி முஸ்லிம்களின் ஆயுத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சுட்டுப் படுகொலை செய்ததாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல நகரங்களை சன்னி பிரிவு ‘ஐ.எஸ்.ஐ.எஸ்' தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது குர்திஷ்தானிலும் பல இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
அங்கு சிறுபான்மையினராக வாழும் ‘யாஸிதி' என்ற பூர்வீக குடிமக்களையும், கிறிஸ்தவர்களையும் இஸ்லாம் மதத்துக்கு மாறுங்கள், இல்லா விட்டால் கொன்று விடுவோம் என எச்சரித்து வருகின்றனர்.
இதனால் அஞ்சும் அவர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் சிஞ்சார் மலையில் பதுங்கி உள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் தண்ணீர் மற்றும் உணவு வழங்கி வருகிறது.
சிஞ்சார் அருகே ‘கோசோ' என்ற இடத்தில் 'யாஸிதி' இன பூர்விக குடிமக்கள் உள்ளனர். அங்கு புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினர்.
அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர். இஸ்லாம் மதத்துக்கு மாறும் படி 5 நாட்களாக சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன் பிறகும் அவர்கள் மதம் மாற மறுத்து விட்டனர்.
அதன் பின்னர் கோசோ கிராமத்தில் ஒரு பள்ளிக்கு அவர்களை அழைத்து சென்று ஆண்கள் 80 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், ‘யாஸிதி' இன பெண்கள் மற்றும் குழந்தைகளை தல்அபிள் நகருக்கு கடத்தி சென்று விட்டனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.