கேப் விடாமல் அலறும் ஜெருசலேம் சைரன்கள்.. தாறுமாறாக பாயும் ஈரான் ஏவுகணைகள்.. மக்கள் அச்சம்! திக்திக்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே இஸ்ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்தும் நடவடிக்கையும் தொடர்ந்து நடந்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் ஈரான் பிடிகொடுக்காத நிலையில், அவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. முதலில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. அதில் ஈரான் ராணுவ தளபதி, அணுசக்தி விஞ்ஞானிகள் எனப் பலரும் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து அலறும் சைரன்கள்
இதற்கிடையே தங்கள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் தங்கள் நாட்டை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் இதனால் வட இஸ்ரேலில் தொடர்ச்சியாக சைரன்கள் அலறுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
மேலும், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களின் வானில் ஏவுகணைகள் பறந்து செல்வதையும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டின் தென்மேற்குப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
மிகப் பெரிய மோதல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய மோதல் இதுவாகவே கருதப்படுகிறது. இந்த மோதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இது ஒரு பெரிய போராக வெடிக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலில் பல இடங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்குப் பிறகு ஹைஃபா நகரில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டுச் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைப்புகள்
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் கண்டறியப்பட்டால் மக்களை எச்சரிக்கும் வகையில் சைரன் அடிக்கும் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பித்த சைரன் சத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.. மாலை நேரத்தில் இதுபோல சைரன்கள் ஒலிப்பது இதுவே முதல் முறையாம்.
அதேபோல ஈரானிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் தெஹ்ரானில் உள்ள எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உலகப் பொருளாதாரமும், ஈரான் அரசும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெஹ்ரானிலும் விடிய விடிய சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மிகப் பெரிய தாக்குதல்
இஸ்ரேல் எல்லையில் இருந்து சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் இருந்த ஈரான் விமானம் மீதும் தாக்குதல் நடத்தியது. ஈரான் எல்லைக்குள் இவ்வளவு தூரம் ஊருடுவி இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்குப் பதற்றம் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications