திணறும் ஈரான்.. ஒட்டுமொத்த வான்வழியை கண்ட்ரோலில் எடுத்த இஸ்ரேல்! எல்லா பக்கமும் செக் வைத்த நெதன்யாகு
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே தெஹ்ரானின் வான் பரப்பு முழுவதையும் தனது கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தனை காலம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி எனத் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வந்தது. இப்போது நேரடியாகவே ஈரானுக்கு எதிராகவே மோதலை ஆரம்பித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

கண்ட்ரோலில் கொண்டு வந்த இஸ்ரேல்
இதற்கிடையே ஈரான் தலைநகரான தெஹ்ரானின் வான் பரப்பு முழுவதையும் தனது கண்ட்ரோலில் எடுத்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஈரான் இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும், இஸ்ரேல் விமானப்படை கடந்த சில நாட்களாக தெஹ்ரான் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இது உண்மையாகவே இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேல் இப்போது ஜெட் விமானங்களைப் பயன்படுத்திக் குறுகிய தூர வழிகாட்டுதல் மிஸைல் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்துகின்றன. இதுவரை தொலைதூர ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தவில்லை. எனவே, அதைப் பயன்படுத்தத் தொடங்கினால் இஸ்ரேலின் கை இன்னுமே ஓங்கும்.
ஈரான்
மறுபுறம் ஈரான் ராணுவமும் கூட அவ்வளவு தூரம் வலிமையானதாக இல்லை என்பதே உண்மை. ஈரானின் பழமையான போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு எந்த விதமான சவாலையும் ஏற்படுத்தவில்லை. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, அந்நாட்டின் விமான பாதுகாப்பு அமைப்பின் கணிசமான பகுதியை இஸ்ரேல் அழித்திருந்தது. இதனால் ஈரானால் இஸ்ரேல் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ரஷ்ய வடிவமைப்பான S300 ஏவுகணைகள் குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில், ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் ஏவுதளங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கியது. இதனால் இந்த மோதலுக்கு முன்பே ஈரானின் வான் பாதுகாப்பு சற்று வலிமையிழந்தே இருந்தது.
முழு ஆதிக்கம் இல்லை
ஈரானுடன் ஒப்பிடும்போது இஸ்ரேலுக்கு அப்பர் ஹேண்ட் இருப்பது உண்மை என்றாலும் இஸ்ரேல் ஆதிக்கம் முழுமையாக இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் வல்லுநர்கள்.. குறைந்த தூரம் சென்று தாக்கும் சிறிய ஏவுகணைகள், ஈரான் ராணுவத்திடம் இன்னும் நிறைய உள்ளன. அவை இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.
மேலும், மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் நடந்த மோதல்களை வைத்துப் பார்த்தால் வான்வழித் தாக்குதல்கள் ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் என்ற போதிலும் அது முழுமையான வெற்றியை உறுதி செய்யாது. எனவே, ஈரானின் வான்வழியை இஸ்ரேல் தனது கண்ட்ரோலில் கொண்டு வந்தாலும் கூட அது முழுமையான வெற்றியை உறுதி செய்யாது என்பதே உண்மை!
பின்னணி
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் இஸ்ரேல் தான் ஈரான் மீது குறிவைத்துத் தாக்குதலை ஆரம்பித்தது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றமே நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications