"குறி தப்பாது!" ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்! ஹமாஸ் "மாஸ்டர் மைண்ட்" தளபதி டிரோன் தாக்குதலில் உயிரிழப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் படைத் தளபதி டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே போர் தொடர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர். மிகக் குறுகிய நேரத்தில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது.

முதலில் வெறும் 20 நிமிடத்தில் 5000 ஏவுகணைகளை வீசிய இஸ்ரேலை ஹமாஸ் படை அதிர வைத்தது. மேலும், பாராசூட் மூலமாகவும் ஜீப் மூலமாகவும் தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
இஸ்ரேல் போர்: இந்த தாக்குதலில் முதலில் இஸ்ரேல் திணறியது உண்மைதான். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். மேலும், பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களைக் குறிவைத்து குண்டு மழை பொழிந்தன. இதனால் அங்கே கடந்த ஒரு வாரமாகவே போர் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே காசா பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹமாஸ் படையின் நுக்பா பிரிவு நிறுவனத் தளபதி அலி காடி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஹமாஸ் படை நடத்திய தாக்குதலை இவர் தான் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் கமாண்டோ: இது தொடர்பாக இஸ்ரேல் விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில், "துல்லியமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் இஸ்ரேல் விமான படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் 'நுக்பா' கமாண்டோ படையின் நிறுவனத் தளபதி அலி காதியைக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் காசா பகுதிக்கு அருகே இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை ஒருங்கிணைத்தவர் இவர்தான்.
கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் மக்களைக் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக அலி காதியை இஸ்ரேல் கைது செய்திருந்தது. அதைத் தொடர்ந்து கிலாட் ஷாலிட் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்" என்று பதிவிட்டுள்ளது.
பயங்கரவாதிகளைக் குறி வைத்துத் தாக்குதல்: அதேபோல இஸ்ரேல் அரசு தரப்பிலும் இதனை உறுதி செய்துள்ளது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது மூர்க்கத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்த ஹமாஸ் 'நுக்பா' கமாண்டோ படைத் தளபதி அலி காதி கொல்லப்பட்டதை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. இவர் மட்டுமின்றி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பல்வேறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல காசாவில் சுமார் 1500 பேர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே, வடக்கு காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications