'Operation True Promise 3'.. ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கிய ஈரான்! சிக்கலில் இஸ்ரேல்
தெஹ்ரான்: ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர், 'ஆபரேஷன் ரைசிங் லையன்'. ஆனால் இப்போது ஈரான் திருப்பி தாக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு ஈரான் வைத்திருக்கும் பெயர் 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3'. இந்த பதில் தாக்குதலால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் மீது இன்று அதிகாலை முதல் கடுமையான ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியிருக்கிறது. இதில் பலவற்றை இஸ்ரேல் தடுத்து அழித்திருக்கிறது. இப்படி நடக்கும் என்று ஈரானுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் சில ஏவுகணைகளாவது இஸ்ரேலை தாக்கும் என்கிற எண்ணத்தில் அடுக்கடுக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவியிருக்கிறது.

இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 6 இடங்களை மட்டுமே குறி வைத்து நாங்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறோம் என்று ஈரான் கூறியிருக்கிறது. அதாவது
1. டெல் அவிவ் பொருளாதார மையம்
2. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடம்
3. நிதியமைச்சகத்தின் கட்டிடம்
4. Tel Nof விமானத்தளம்
5. Haifa-வில் சில இடங்கள்
6. காசா கடல் எல்லைக்குள் இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம்
இந்த 6 இடங்கள் மீது மட்டுமே ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டிருக்கிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சத்தின் பலம் என்ன என்பதை உலகமே அறியும். ஏவுகணைகளை துல்லியமாக கண்டுபிடித்து தாக்கி அழிக்கும். அப்படித்தான் ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருக்கிறது.
ஆனால், ஈரான் ஏவுகணைகள் கொஞ்சம் வித்யாசமானவை. அதன் 'வார் ஹெட்' (Warhead) அதிகம். ஒரு ஏவுகணை எவ்வளவு சேதங்களை ஏற்படுத்துகிறது? அதில் எவ்வளவு வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன? என்பதைதான் 'வார் ஹெட்' என்று சொல்வார்கள். அந்த வகையில் ஈரானின் 'Khalid Farzh' ரக ஏவுகணைகள் சுமார் 1 டன் அளவுக்கு வெடி மருந்துகளை சுமந்து செல்லும். இதனால் ஒரு 10 மாடி கட்டிடத்தை கடுமையாக சேதப்படுத்த முடியும். இதிலிருந்து வெளிவரும் அதிர்வலைகள் மோசமானது என்பதால் உயிரிழப்புகள் நிச்சயம் அதிகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு ஈரான் 100 ஏவுகணைகளை ஏவுகிறது எனில், அதில் 90-ஐ இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டாலும், 10 ஏவுகணைகள் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஈரான் சமீபத்தில் நவீன ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்திருந்தது. இது, 2 டன் அளவுக்கு வெடிமருந்தை கொண்டு செல்லும் திறன் வாய்ந்தது. இப்படியான ஏவுகணைகள் கொண்டு தாக்கப்பட்டால், அனைத்து ஏவுகணைகளையும் இஸ்ரேல் தடுத்தே ஆக வேண்டும். ஒன்று விழுந்தால் கூட அது பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.
இப்படியான ஏவுகணைகளை 2000 என்கிற எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் ஏவ ஈரான் திட்டமிட்டு வருகிறது. இது 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3'-ன் ஒரு பகுதியாகும். இந்த ஆபரேஷனை உடனடியாக நிறுத்தப்போவதில்லை என்றும் ஈரான் அறிவித்திருக்கிறது.











Click it and Unblock the Notifications