ஈரானில் தேள் கொட்டினால்.. இந்தியாவில் நெறி கட்டும்! அயதுல்லா கையில் பிரம்மாஸ்திரம்.. பெரிய சிக்கல்!
டெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில் மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் நிலையில், உலக அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
காஸா மீதான தாக்குதலுக்கு இடையே இஸ்ரேல், கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் ராணுவ தளம், அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையம் ஆகியவற்றை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் பலத்த சேதத்தை சந்தித்ததோடு ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், படைப்பிரிவுகளை வழி நடத்தியவர்கள், முக்கிய விஞ்ஞானிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரான் மீதான தாக்குதல் வெறும் தொடக்கம் மட்டுமே என்றும் இனிமேல் தான் உண்மையான தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் எச்சரித்து இருக்கிறது. தொடர்ந்து ஈரானின் எண்ணெய் தயாரிப்பு மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில் ஈரானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது நடத்தி வரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் ஆதரவளிக்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் கூறி இருக்கிறது.
ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்திருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி ஓமன் வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கிறது. சுமார் 33 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த ஹார்முஸ் ஜலசந்தி 3 கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்ட கப்பல் பாதையை கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டு மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 80 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த மாதம் வரை தினமும் சுமார் 20 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்கின்றன.
சவுதி அரேபியா, ஈரன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணையின் பெரும் பகுதியை இந்த ஜலசந்தி வழியாகத்தான், குறிப்பாக ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகவே ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் கூறினாலும் தற்போது வரை ஒரு முறை கூட அதனை மூடவில்லை. இந்த நிலையில் இஸ்ரேல் தங்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனை மூடப் போவதாக அறிவித்துள்ளது.
ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உலக சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இந்தியாவின் பணம் வீக்கத்தை அதிகரிக்கும். தற்போது 70 டாலருக்குள் கச்சா எண்ணெய் விலை இருக்கும் நிலையில் அது 150 டாலரை கூட தொடலாம். இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து போக்குவரத்து மற்றும் பொருளாதார கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இந்திய ஈரானுக்கு அரிசி, டீ தூள், மருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யும் நிலையில் வர்த்தக பாதிப்பும் இருக்கிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் இந்திய பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படும். மேலும் எண்ணெய் விலை உயர்வதால் இந்தியாவின் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்து ஏற்றுமதி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications