ஈரானின் ‘டாப்’ தலைக்கு குறி..கடைசி நேரத்தில் கைவிட்டது ஏன்? வாயை விட்ட ட்ரம்ப்! சிக்கலில் நெதன்யாகு!
சென்னை: இஸ்ரேல் ஈரான் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் போட்ட திட்டத்தை கடைசி நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்தது போல, இஸ்ரேல் ஈரான் போரையும் தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் தற்போது தனது பார்வையை ஈரான் பக்கம் திருப்பி இருக்கிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அப்பகுதி போராளி குழுக்களுக்கு ஆதரவாக ஈரானும், ஹிஸ்புல்லா போராளி குழுவினரும் உதவி வருகின்றனர்.
இதை அடுத்து தங்கள் நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத உற்பத்திக் கூடங்கள், ராணுவ நிலைகள் உள்ளிட்டவற்றை நோக்கி இஸ்ரேல் போர் விமானங்களும், ஏவுகணைகளும், ட்ரோன்களும் சீறிப்பாய்ந்து தாக்குதல் நடத்தின.

இஸ்ரேல் ஈரான் போர்
இதில் ஈரானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் உற்பத்தி தளங்களையும் இஸ்ரேல் தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த ஈரான், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று காலை முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதிநவீன ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிப் மற்றும் ஜெருசலேம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதல்
இதில் இஸ்ரேலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இஸ்ரேல் கோபமடைந்துள்ள நிலையில் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேருக்கு நேர் இரு நாடுகளும் சண்டையிட்டு வரும் நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன.
ஈரான்
இதனால், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருக்கும் நிலையில் மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் விரைந்து உள்ளன. இதனால் அங்கு கடும் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் தாக்குதலால் கோபமடைந்துள்ள இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் பல அதிரடி திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது.
கமேனி கொலை திட்டம்
கமேனியை கொல்வதற்கான திட்டத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடம் அளித்ததாகவும், ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்க மறுத்ததாக அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஈரான் இடையான போரை தன்னால் நிறுத்த முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
டிரம்பின் சமாதான பேச்சு
பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது போல, இஸ்ரேல் ஈரான் இடையிலான போரையும் என்னால் நிறுத்த முடியும். இந்த உலகத்தில் அமைதிக்காக நான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன். ஆனால் யாருமே அதனை அங்கீகரிப்பதில்லை. இப்போது கூட என்னால் இஸ்ரேல் ஈரான் இடையேயான போரை நிறுத்த முடியும் என கூறியிருக்கிறார். ஆனால் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக கூறிவரும் நிலையில் ட்ரம்ப் மீண்டும் அதே கருத்தை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவுக்கு சிக்கல்
இது ஒருபுறம் இருக்க கமெனியை கொல்வதாக இஸ்ரேலின் திட்டத்தை பொது வழியில் போட்டு அமெரிக்கா உடைத்திருப்பது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications