இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்
ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும்.
இப்போது ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், புனித அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேலிய போலீஸ் படை, அங்கே இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்றினர். ரம்ஜான் மாதத்தின் நான்காம் நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
"புதுசா இருக்கே.." மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது
அல்-அக்ஸா மசூதி
இந்த சம்பவம் குறித்து மேலும் பார்க்கும் முன்பு, அல்-அக்ஸா மசூதி குறித்தும் அங்கே என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் மதத்தில் மெக்கா, மதீனாவிற்கு அடுத்து மூன்றாவது புனித தளமாக அல்-அக்ஸா மசூதி கருதப்படுகிறது. அதேபோல யூதர்களும் இதை தங்கள் புனித தளமாகக் கருதுகிறார்கள். இந்த மசூதி அமைந்துள்ள மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமை ஜோர்டான் தான் ஆட்சி செய்து வந்தது. 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போருக்குப் பின்னர் தான், இது இஸ்ரேல் வசம் வந்ததது.
உடன்படிக்கை
இருப்பினும், முழு கட்டுப்பாடும் இஸ்ரேலுக்கு செல்லவில்லை. ஜோர்டன் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கை படி, ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தளங்களைக் கண்காணிக்கும் ஜோர்டானுக்கு உரிமை கிடைத்தது. அதன்படி அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் யூதர்கள் உட்பட இஸ்லாமியர்கள் இல்லாதவர்கள் குறிப்பிட்ட நாட்களில் நுழையலாம். ஆனால், பிரார்த்தனை செய்யக் கூடாது என்று உத்தரவு உள்ளது. இந்த வளாகத்தை ஜோர்டன் நிர்வகித்து வந்த நிலையில், இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேல் கவனித்து வந்தது.
இஸ்ரேல் போலீஸ் படை
இப்போது ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், ரம்ஜான் மாதத்தின் நான்காவது நாளில் அல்-அக்ஸா மசூதியில் இஸ்லாமியர்கள் வழக்கம் போல பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே உள்ளே நுழைந்த இஸ்ரேல் போலீஸ் படைகள், அல்-அக்ஸா மசூதிக்குள் இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்றினர். கடந்த சனிக்கிழமை இரவு அல்-அக்ஸா மசூதிக்குள் முஸ்லீம் ஆண்களும் பெண்களும் இருந்துள்ளனர். அவர்களைத் தான் போலீஸ் படை வெளியேற்றியுள்ளது.
விளக்கம்
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிமுறையின், யூதர்கள் அந்த மசூதி வளாகத்திற்குள் வரலாம். அதன்படி மறுநாள், காலை யூதர்கள் அங்கே வர திட்டமிட்டிருந்தனர். யூதர்களின் வருகையின் போது சிலர் கலவரம் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் தரப்பு, அதற்காகவே அவர்கள் அங்கே இருந்ததாகவும் அவர்களைத் தான் இஸ்ரேல் போலீஸ் படைகள் வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர். இஸ்ரேல் படைகள் உள்ளே புகுந்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகள்
திடீரென போலீசார் வந்ததால் அஞ்சிய பாலஸ்தீனியர்கள், கத்திக் கொண்டே அங்கிருந்து அஞ்சி ஓடும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பாலஸ்தீனியர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில காலமாகவே இந்த பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ரம்ஜான் மாதத்தில் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைவதற்கு பாலஸ்தீனியர்களுக்கு பல கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இட்மர் பென் கிவிர்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் உத்தரவின்படியே இஸ்ரேல் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக இதே இட்மர் பென் கிவிர் தான் கடந்த ஜனவரி மாதம் அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். யூதர்கள் அங்கே செல்ல தடையில்லை என்ற போதிலும், வலதுசாரி தலைவர் அங்கே சென்றது நிலைமை மேலும் மோசமாக்குவதாக இருந்தது. இதற்கு அப்போதே பல இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.