"உங்க டைம் ஓவர்.." ஹமாஸ் சுரங்கப் பாதைகள் குறி.. காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவம்.. பரபரப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், காசா நகரை இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

காசா மீது முதலில் சரமாரி ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இது மட்டுமின்றி இப்போது தரைவழி தாக்குதல்களையும் இஸ்ரேல் தீவிரமாக ஆரம்பித்துள்ளது. காசா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. காசா நகரைச் சுற்றி இஸ்ரேல் சுற்றிவளைத்துள்ள நிலையில், தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர். ஹமாஸ் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சுரங்கங்களில் தான் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
முன்னதாக போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் போர் இப்போது தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், காசா நகரின் புறநகர்ப் பகுதியை வெற்றிகரமாகப் பிடித்துவிட்டோம் என்றும் வேகமாக முன்னேறி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சுற்றி வளைத்துத் தாக்குதல்: காசாவில் இஸ்ரேல் ராணுவ ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், "காசா நகரைச் சுற்றி வளைத்துவிட்டோம். இப்படிச் சுற்றி வளைத்துத்தான் தாக்குதல் நடத்துவோம் என்றே ஹமாசுக்கு தெரிந்தே இருக்கிறது..
இதனால் அவர்கள் சுற்றிலும் பல இடங்களில் கண்ணிவெடிகளை வைத்துள்ளனர். ஹமாஸ் இதற்கு நன்கு தன்னைத் தயார் படுத்தியே இருக்கிறது" என்றார். மேலும், தற்போது இருக்கும் சூழலுக்குப் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நேரம் முடிந்துவிட்டது: காசா நகரின் மையப்பகுதியை ஒட்டியிருக்கும் ஷாதி அகதிகள் முகாமிலிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இது தொடர்பாகத் தனது ராணுவ விமானங்கள் மூலம் அங்குள்ள மக்களுக்கு நோட்டீஸையும் இஸ்ரேல் போட்டுள்ளது. "நேரம் முடிந்துவிட்டது" என்ற வாசகத்துடன் உடனடியாக அங்கிருந்து மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தும் வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
வடக்கு காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பலமுறை அழைப்பு எச்சரித்துவிட்ட போதிலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இன்னும் போர் நடக்கும் இடத்திலேயே உள்ளனர். இதனால் அங்கே பெரும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இருக்கும் அப்பாவி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று இஸ்ரேல் படைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications