பேரழிவை சந்திக்க போறீங்க.. ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்த இஸ்ரேல்! உக்கிரமடையும் போர் சூழல்
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், தற்போது தரை வழியாக ஊடுருவவும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் படைகள் மீது ஹில்புல்லா அமைப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் நீடித்தால் ஹில்புல்லா பேரழிவை சந்திக்கும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. இப்படி இருக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா எனும் அமைப்பு, இஸ்ரேல் ஆக்கிரமிப்புகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இது இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. இது குறித்து எச்சரித்த இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. அவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகமான அளவில் தாக்குதல்களை காண்கிறோம். இது இப்படியே நீடித்தால் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள்" என ஹிஸ்புல்லாவை எச்சரித்துள்ளார்.
போர் விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது என்றும் அந்நாடுகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications