கட்சியிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா? பாஜகவால் இந்தியாவுக்கே தலைகுனிவு - நவாஸ் கனி எம்.பி.
சென்னை: பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிகிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவும் கலவரமும்
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வளைகுடாவில் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

குவைத் அரசு
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குவைத் அரசு, இந்தியா இதற்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குவைத்துக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அவதூறு கருத்தை தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்த மத உரிமைகளையும் மதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது இந்திய அரசின் கருத்து கிடையாது என குவைத் அரசிடம் தூதர் விளக்கமளித்து இருக்கிறார்." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி
இந்த நிலையில், பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிவதாக முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "உலகிலுள்ள இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் உத்தம நபிகள் நாயகம் அவர்கள் குறித்து அவதூறாய் விஷக் கருத்துக்களை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மீது கட்சியிலிருந்து நீக்கம் என்ற மிகச் சாதாரண நடவடிக்கை மட்டும் போதாது.
Recommended Video

சட்டப்படி தண்டிக்க வேண்டும்
அவர்கள் புண்படுத்தியது உலகம் முழுவதும் வாழ்கின்ற கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் உணர்வுகளை. அந்த விசம குணம் படைத்த அயோக்கியர்கள் சட்டத்தின் அடிப்படையில் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாஜகவின் இந்த வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. கண்துடைப்பு நடவடிக்கை இல்லாமல், கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற விஷக் கருத்துக்களை தெரிவிப்பதை பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications