ஜப்பானை நாளை தாக்கும் மெகா சுனாமி? உச்சத்தில் பேரழிவு? பயப்படும் பொதுமக்கள்! என்ன மேட்டர்
டோக்கியோ: உலகிலேயே அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் ரிங் ஆஃப் பையர் என்ற பகுதிக்குள் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படும். இதற்கிடையே நாளைய தினம் அதாவது ஜூலை 5ம் தேதி ஜப்பானை மிகப் பெரிய ஒரு சுனாமி தாக்கும் என்ற கணிப்பு இணையத்தில் பரவி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் செல்வதைத் தவிர்க்கும் நிலையில், அந்நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளப் பொதுமக்களிடையே எப்போதும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இதுபோல எதிர்காலத்தைச் சரியாகக் கணிப்போரை மக்கள் எப்போதுமே வியந்து பார்ப்பார்கள். வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது சிலருக்கு இதுபோல எதிர்காலத்தைப் பார்க்கும் பவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரளயமே வெடிச்சிடுச்சு
அப்படி ஒரு விஷயத்தால் ஜப்பானில் மிகப் பெரிய பிரளயமே நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிண்ட் செய்யப்பட்ட ஜப்பான் காமிக் புத்தகம் ஒன்றில் இருந்த தகவல்களே இதற்குக் காரணமாகும். இது ஹாங்காங், தென் கொரியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடையே ஒருவித அச்சத்தைத் தூண்டி உள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது.
ஜப்பானின் பாபா வாங்கா
'தி ஃபியூச்சர் ஐ சா' என்ற காமிக் புத்தகத்தில் இருந்த தகவல்களே இதற்குக் காரணமாகும். பல ஆண்டுகள் பழமையான இந்த காமிக் புக் கடந்த 2021ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. ரியோ டாட்சுகி என்ற இந்த நபர் 2011ல் ஏற்பட்ட பூகம்பத்தைச் சுனாமியை முன்கூட்டியே கணித்திருந்தார். மேலும், கொரோனா பேரழிவையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். இவரை ஜப்பானின் பாபா வாங்கா என்று கூட சிலர் அழைக்கிறார்கள். இதனால் ஜப்பான் மக்களுக்கு இதன் மேல் ஆர்வம் அதிகரித்தது.
நாளை சுனாமி?
அந்தப் புத்தகத்தில் நாளை அதாவது ஜூலை 5ம் தேதி ஜப்பானில் பேரழிவு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் மிகப் பெரிய சுனாமி ஏற்படும் என்று கூறுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோவே தீயாகப் பரவி வருகிறது. அதில் ஜப்பானைப் பேரழிவு தாக்கும் என்றும் ஜப்பானுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுக்கவே ஜப்பான் செல்ல வேண்டாம் எனச் சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
80% வரை வீழ்ச்சி
இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறார்கள். ஏற்கனவே புக் செய்தவர்கள் தங்கள் பயணத்தையே கேன்சல் செய்துவிடுகிறார்களாம். இதனால் ஹாங்காங் ஏர்லைன்ஸ் ககோஷிமா மற்றும் குமாமோட்டோ உள்ளிட்ட ஜப்பானிய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கான முன்பதிவுகளில் 80% வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக டிராவல் ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
ஜப்பான் அரசு விளக்கம்
ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் கூட அச்சத்தில் இருக்கிறார்களாம். பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வதென்று பயத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் பூகம்பம், சுனாமி போன்றவற்றை முன்கூட்டியே கணிக்க வாய்ப்பே இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக யாராலும் சொல்ல முடியாது என்றும் இதை நம்ப வேண்டாம் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வழக்கம் போல ஜப்பானுக்குச் சுற்றுலா வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications