வந்தாச்சு "செயற்கை ரத்தம்.!" இனி எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேடி அலைய வேண்டாம்.. அசத்தும் ஜப்பான்
டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஆய்வாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ரத்தம் உண்மையான ரத்தம் போலவே ஆக்சிஜனை எடுத்துச் செல்லுமாம்.. காலாவதியான ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹீமோகுளோபின் (சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரதம்) மூலம் இந்த செயற்கை ரத்தம் செய்யப்படுகிறது. அந்த செயற்கை ரத்தம் சிறிய குமிழ்களாக அடைக்கப்பட்டு பாதுகாப்பாகவும், எளிதாகவும் சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எமர்ஜென்சி காலத்தில் சரியான ரத்த வகையை அடையாளம் காண்பதே கடினமான வேலை. ஓ பாசிட்டிவ் போன்ற ரத்தம் எளிதாக கிடைக்கும். ஆனால், சில குறிப்பிட்ட வகை ரத்தம் அரிய வகையாக இருக்கும். அவை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

செயற்கை ரத்தம்
மருத்துவ அவசர காலங்களில் குறிப்பிட்ட ரத்த வகையை தேடி அலைவோம்.. ஆனால், செயற்கை ரத்தத்தில் அந்த சிக்கல் இல்லை. இந்த செயற்கை ரத்தம் எல்லா வகை ரத்தத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால் அவசர காலங்களில் ரத்தத்தை தேடி அழைய தேவையில்லை.
இந்த வகை ரத்தம் காலாவதியான ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹீமோகுளோபின் (சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரதம்) மூலம் இந்த செயற்கை ரத்தம் செய்யப்படுகிறது. மேலும், செயற்கை ரத்தம் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.. ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்படும் ரத்தம் சில வாரங்கள் முதல் அதிகபட்சம் சில மாதங்கள் ரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். ஆனால், இந்த செயற்கை ரத்தம் 2 ஆண்டுகள் வரை நன்றாக இருக்கும்.
வைரஸ் பாதிப்புகள்
எல்லாவற்றையும் விட முக்கியமாக தானம் மூலம் ரத்தத்தை பெறும்போது வைரஸ் பாதிப்பு அச்சம் இருக்கும். அதாவது ஒருவரிடம் ரத்தம் பெறும்போது, அதில் வைரஸ் இருந்தால் அது நம்மையும் பாதிக்கும். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 1982இல் விபத்தில் சிக்கிய நிலையில், அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் அவருக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால், செயற்கை ரத்தத்தில் அதுபோல எந்தவொரு பாதிப்பும் ஏற்படவே ஏற்படாது. இதனால் தொற்று நோய் ஆபத்தும் குறைவு.
ஹீமோகுளோபின் வெசிகல்ஸ் என்றால் என்ன?
ஹீமோகுளோபினை நுண்ணிய காப்ஸ்யூல்களாக உருவாக்குவதே இதன் அடிப்படை. சின்ன காப்ஸ்யூல் என்றால் மிக மிக சிறியது. அவை சுமார் 250 நானோமீட்டர் அகலம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு முடியை விட 4,000 மடங்கு மெல்லியதாக இருக்கும். இந்த காப்ஸ்யூல்கள் ரத்த ஓட்டத்தில் மிதந்து, உடலில் இருக்கும் இயற்கை சிவப்பு ரத்த அணுக்கள் போலவே ஆக்சிஜனை வெளியிடும்.
சோதனை
இதன் முதற்கட்ட சோதனை ஜப்பானில் நடத்தப்பட்டது. ஜப்பானில் உள்ள தன்னார்வலர்களிடையே சிறிய சோதனை நடத்தப்பட்டது. 10-100 மில்லி வரையிலான செயற்கை ரத்தம் அவர்களுக்கு செலுத்தப்பட்டது. பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் அது பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது. இப்போது, விஞ்ஞானிகள் அதிக அளவுகளில் (400 மில்லி வரை) செயற்கை ரத்தத்தை செலுத்தி பரிசோதித்து வருகிறார்கள். செயற்கை ரத்தத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார்கள். இதுவரை தற்காலிக காய்ச்சல் அல்லது லேசான ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற லேசான பக்க விளைவுகள் மட்டுமே காணப்பட்டன.
சோதனைகள் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இது மருத்துவ உலகில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முழுமையான சோதனைகள் முடிந்தால்.. 2030இல் மருத்துவமனைகள் இந்த செயற்கை ரத்தம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்.












Click it and Unblock the Notifications