முடிச்சு விட்டீங்க போங்க! தேர்தலில் தோல்வி.. ஜப்பான் பிரதமர் ராஜினாமா? டிரம்ப் பார்த்த வேலைதான்!
டோக்கியோ: சமீபத்தில் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஷிகேரு இஷிபாவின் கட்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து அவர் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தோல்விக்கு டிரம்ப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஷிகேரு ராஜினாமா தகவல்களை மறுத்திருக்கிறார்.
ஜப்பான் செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகளில், அவர் ராஜினாமா செய்ய ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் மறுத்திருக்கிறார்.

மற்ற நாடுகளுக்கு போல ஜப்பானுக்கும் அமெரிக்கா வரியை போட்டிருக்கிறது. இந்த வரி குறித்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். சுமூகமாக முடிவெடுத்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடங்கலாம். இல்லையெனில் வரியை போட்டு அமெரிக்கா நச்சரிக்கும். தற்போதைய சூழலில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கெடு நெருங்கி வருவதால், அரசியல் நிலையற்ற தன்மையை தவிர்க்கும் நோக்கில் இஷிபா உடனடியாக பதவி விலகவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஜப்பானிய ஊடகங்கள் இஷிபா அடுத்த மாதம் ராஜினாமா செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன. அவர் பதவி விலகினால், புதிய அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கூட்டணியில் தலைமைப் போட்டி ஏற்படும்.
குறிப்பாக "ஜப்பானிய ஃபர்ஸ்ட்" சான்செய்டோ எனும் தீவிர வலதுசாரி குழு சமீபத்திய தேர்தலில் 248 இடங்கள் கொண்ட மேல் சபையில் தனது பிரதிநிதித்துவத்தை 1லிருந்து 14 ஆக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்சி குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், வரிகளைக் குறைத்தல் மற்றும் அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற வாக்குறுதிகளால் வாக்காளர்களை கவர்ந்துள்ளது. இக்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க தீவிரமாக முயன்று வருகிறது.
எப்படி இருப்பினும், தலைமை யாராக வந்தாலும் நாடாளுமன்றத்தில் இரு அவையலும் பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளை சகித்துக்கொண்டுதான் ஆட்சி செய்ய வேண்டி வரும். ஆளும் கட்சிக் கூட்டணிக்கு புதியதாக வரும் தலைவர், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை. அவர் கட்சியின் பலத்தை அதிகரிக்கத்தான் முயற்சிப்பார். பின்னர்தான் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் எப்படி காரணம்?
ஜப்பான் சந்தை அமெரிக்காவுக்கு இதுவரை மூடியே இருந்தது. மட்டுமல்லாது ஜப்பானின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே ஜப்பானுக்கு 25% வரி விதிக்கப்படும். இல்லையெனில் எங்களுக்கு சந்தையை திறக்க வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். வரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கும் என்பதால் ஜப்பான் இது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வரும் அரிசி உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு ஜப்பான் தனது சந்தையை திறக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. பதிலுக்கு அமெரிக்கா, ஜப்பான் மீதான வரியை 25லிருந்து 15% ஆக குறைத்திருக்கிறது. ஆக எப்படி இருந்தாலும் ஜப்பான் பொருளுக்கு 15% வரி என்பது கன்பார்ம். இது ஜப்பான் நிறுவனங்களை பாதிக்கும். இந்த வரியால்தான் ஜப்பானில் தற்போது குழப்பங்கள் எழுந்திருக்கின்றன. ஆக டிரம்ப் ஜப்பான் கதையை முடித்துவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications