உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. அனைத்து வெளிநாட்டினருக்கும் மீண்டும் தடை விதித்த ஜப்பான்
டோக்கியோ: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை.
ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் தான் கடந்த காலங்களில் வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்
ஓமிக்ரான் கொரோனா
இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உலக நாடுகள்
இருப்பினும், தற்போது தான் முந்தைய அலைகளில் இருந்தே மீண்டு வருவதால் உலக நாடுகள் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் தான் பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும், இஸ்ரேல் நாடு ஒட்டுமொத்தமாக அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலைத் தொடர்ந்து ஜப்பானும் அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது.
தடை விதித்த ஜப்பான்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்த புதிய தடை வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பெரும்பாலான காலம் வெளிநாட்டினருக்கு ஜப்பான் தனது எல்லையை மூடியே வைத்திருந்தது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போதிலும் கூட வெளிநாடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்களுக்கும் கூட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
ஜப்பான் அறிவிப்பு
இந்தச் சூழலில் இம்மாத தொடக்கத்தில் தான் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலதிபர்கள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோருக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை ஜப்பான் அளித்திருந்தது. இந்தச் சூழலில் தான் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் தனது எல்லையை இறுக்கி மூடியுள்ளது ஜப்பான். ஏற்கனவே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து ஜப்பான் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேக்சினுக்கு கட்டுப்படுமா
இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதால் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வேக்சின்கள் வைரஸ் மேற்புறத்தில் உள்ள புரோத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்படும் என்பதால் இது வேக்சினுக்கு கட்டுப்படுமா என்பது குறித்தும் சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், தற்போது வரை இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றே தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.