பளபளவென ஜொலிக்கும் கடல்.. உற்றுப்பார்த்தால் பல்லாயிரம் ஜெல்லி மீன்கள்.. ஆனா.. அதுலதான் ஆபத்தே!
ஜெருசேலம்: சமீப நாட்களாக உலகின் வட துருவத்தில் உள்ள பனி பாறைகள் அதிக அளவில் உருகுவது, இதனால் கடல்நீர் மட்டம் அதிகரிப்பு என பாதிப்புகள் ஏற்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது, இஸ்ரேல் கடற்பகுதியில் ஏராளமான அளவில் ஜெல்லி மீன்கள் மிதந்து வருவது காலநிலை மாற்றம் குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வசிக்கும் இந்த பூமியானது அது உருவான காலத்திலிருந்து ஏறத்தாழ 5 பேரழிவுகளை சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் கனித்துள்ளனர். இந்த பேரழிவுகளால் இந்த பூமியில் வசித்து வந்த 90க்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்து விட்டதாகவும், மீதி உள்ளவற்றில் ஒன்றாகத்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் சமீப ஆண்டுகளாக ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் லாப நோக்கத்திற்காக மட்டும் பூமியில் இயற்கை பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவு சுரண்டல்கள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக காலநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இது உயிரினங்களிடையே பிரதிபலிக்கிறது என அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெல்லி மீன்கள்
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லைதான். ஆனால் கவலைப்படுவதற்கு நிறைய உள்ளது. முதலாவது இந்த ஜெல்லி மீன் வகைகள் முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாகும். எனவே அது ஆழ்கடலில் மட்டுமே வாழும். இந்நிலையில் கூட்டம் கூட்டமாக இந்த மீன்கள் தற்போது கடலின் மேற்பரப்பில் மிதந்து வருகிறது. இரண்டாவது இஸ்ரேல் கடற்பகுதியில் இதற்கு முன்னர் இந்த மாதிரி ஜெல்லி மீன் கூட்டங்கள் காணப்படவில்லை. இது புதிய இடங்களை தேடி வருகிறது. அதாவது ஏற்கெனவே வாழ்ந்த பகுதியில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக புலம் பெயர்ந்து வருகின்றன.

சுற்றுலாத்துறை
மூன்றாவதாக இது விஷத்தன்மை கொண்ட மீன் என்பதால் இந்த கடல் பகுதியையொட்டி அமைந்துள்ள கடற்கரைகளில் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கூடிய வரையில் கடற்கரையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. எனவே ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி அளவில் சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்டும் இந்நாட்டுக்கு இது இழப்பை ஏற்படுத்தும். மட்டுமல்லாது மீன்பிடி வலையில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்துவது, உப்புநீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட சின்ன சின்ன சிக்கல்களையும் இது ஏற்படுத்துகிறது.

வீடியோ
சமீபத்தில் கடற்படையை சேர்ந்த சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த ஜல்லி மீன்களின் கூட்டத்தை கண்டு பிரமித்து போயுள்ளனர். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது காலநிலை மாற்றம் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இந்த புவியை அதிக அளவில் வெப்பமடைய செய்துள்ளது. இந்த வெப்பம் கடல் நீரிலும் பிரதிபலித்துள்ளது. இந்நிலையில் இந்த மீன்கள் சூடனா பகுதியை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

இனப்பெருக்கம்
இந்த மீன்கள் பொதுவாக செங்கடலில் பரவலாக காணப்படும். ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தால், இவைகள் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலுக்கு பரவியுள்ளன. காலநிலை மாற்றங்கள் இந்த ஒரு குறிப்பிட்ட மீன் இனங்களை அதிக அளவு வளர்வதற்கு ஊக்குவித்துள்ளது. உலகின் மிக பழமையான உயிர்களில் இந்த ஜெல்லி மீன்களும் ஒன்று. ஆனால் இது அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதால் எந்த பலனும் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது.












Click it and Unblock the Notifications