ரூ.275 கட்டினால் 10 லட்சம் கிடைக்கும்! குவைத் உள்பட வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் ப்ளீஸ் நோட்
குவைத்: குவைத் உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு பிபிபிஒய் என்று அழைக்கப்படும் பிரவாசி பாரதிய பீமா யோஜ்னா என்ற காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த பிபிபிஒய் காப்பீடு திட்டத்தில் வெறும் 275 ரூபாய் கட்டி சேர்ந்தால், ஏதேனும் எதிர்பாராத சமயங்களில் 10 லட்சம் ரூபாய் தருகிறது மத்திய அரசு.இந்த திட்டத்தின் பலன்களை பார்ப்போம்.
வெளிநாடுகளில் புலம் பெயர் தொழிலாளர்களாக வாழும் இந்தியர்களுக்கு காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு வெளிநாடுகளில் தொழிலாளர்களாக பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. இதை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 49 பேர் பலியாகி உள்ளர். அதில் 43 பேர் வரை இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். இது போன்ற எதிர்பாராத துயரமான சமயங்களில் மத்திய அரசின் காப்பீடு எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய பலனாக இருக்கும்.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு பிபிபிஒய் என்று அழைக்கப்படும் பிரவாசி பாரதிய பீமா யோஜ்னா என்ற காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குவைத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள், குவைத்துக்கு வரும்போது, ஏதேனும் காயங்கள் / நோய் / உடல் பாதிப்பு ஏற்பட்டவர்கள்(மருத்துவமனைக்கு ரூ. 50,000 வரை) மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக 1 லட்சம் ரூபாய் வரை கோரலாம்.
17 வெளிநாடுகள் : பிபிபிஒய் என்பது இந்திய அரசின் கட்டாயத் திட்டமாகும். இந்த திட்டம் வெளிநாடுகள் செல்ல குடியேற்ற அனுமதி தேவைப்படும் ECR வகை பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் அனைத்து புளூ காலர் தொழிலாளர்களுக்கும் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு அவசியம் ஆகும். ECR வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குவைத் உட்பட 17 வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்கு முன் இந்திய அதிகாரிகளிடமிருந்து குடியேற்ற அனுமதி பெற வேண்டும். அப்போது பிபிபிஒய் திட்டத்தில் சேர வேண்டும். அதேநேரம் ECR அல்லாத பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெறலாம்..
பிபிபிஒய் திட்ட பிரீமியம்: பிபிபிஒய் திட்டத்தின் படி , விபத்தால் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதற்கு காப்பீடு பிரீமியம் என்பது முதல் ஆண்டில் வெறும் ரூ. 275 ஆகும். இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முறையே 375 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். தற்போது விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், பிபிபிஒய் (PBBY) திட்டத்தின் பல்வேறு நன்மைகளை அவர்களின் சமூக ஊடகங்களில் வெளியிட்டது. இந்த தகவல் குவைத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பதால் வெளியிடப்பட்டுள்ளது.
10 லட்சம் காப்பீடு: பிபிபிஒய் திட்டத்தின் படி விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும். அதேபோல் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் தற்செயலான மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் இந்தியாவிற்கு விமானத்தில் திரும்ப எக்கனாமி வகுப்பு விமான கட்டணத்தை ஒரு உதவியாளருக்கு திரும்ப தரப்படுகிறது.
விமான டிக்கெட்: அதேபோல் ஏதேனும் காயங்கள் / நோய் / உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டவர்கள், சிகிச்சை பெற ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது (மருத்துவமனைக்கு 50,000/- வரை வழங்கப்படும்). அதேநேரம் உடல் பாதிப்பு ஏற்பட்டு மேற்கொண்டு வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும் போது, இந்தியா திரும்ப விமான டிக்கெட் வழங்கப்படுகிறது.
பிபிபிஒய் திட்ட பலன்கள்: பிபிபிஒய் திட்டத்தின் மற்ற பலன்கள் என்று பார்த்தால், இந்தியாவில் உள்ள அவரது மனைவி மற்றும் 21 வயது வரை உள்ள அவரது முதல் இரண்டு குழந்தைகளுக்கு 50,000/- வரை மருத்துவ செலவுக்காக பெற முடியும். மகப்பேறுக்கு பெண்களுக்கு 50,000 வரை கிடைக்கும். அதேபோல் இந்திய தொழிலாளர் 30000 வரை சட்ட ரீதியான செலவுக்கு பெற முடியும்.
சான்றிதழ் வாங்குவது எப்படி: பிபிபிஒய் (PBBY) பாலிசியை பொறுத்தவரை 2அல்லது 3 வருடத்திற்கு பிறகு ஆன்லைனிலேயே புதுப்பித்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்லும் இடம் அல்லது காப்பீடு செய்த இடத்தின் இருப்பிடம் மாறினாலும் இந்தத் திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் படி பலன்களை பெறுவதற்கு உங்கள் அருகில் (நீங்கள் பணியாற்றும் நாட்டில்) உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து விபத்து மரணம் / நிரந்தர ஊனம் சான்றிதழைப் பெற வேண்டும்.
குவைத்தில் அலுவலகம்: குவைத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களின் வசதிக்காக, பிபிபிஒய் திட்டத்தில் இப்போது சேர வேண்டும் என்றாலும் தாராளமாக சேரலாம். பிபிபிஒய் திட்டத்தின் படி பாலிசியை தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் எடுக்கலாம். இந்த இரு நிறுவனங்களின் அலுவலகமும் குவைத்தில் செயல்படுகிறது. எனவே இந்திய தொழிலாளர்கள் பிபிபிஒய் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.












Click it and Unblock the Notifications