பாலஸ்தீனத்திற்கு படைகளை அனுப்ப ரெடி.. குண்டு போட்ட ரஷ்ய துணை ராணுவ படை.. கலக்கத்தில் இஸ்ரேல்
மாஸ்கோ: பாலஸ்தீனம் மீதும் ஹமாஸ் படையினர் மீதும் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு உதவ கதிரோவைட்ஸ் படை அனுப்பப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார். கதிரோவைட்ஸ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை ராணுவ படையாகும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இப்படி இருக்கையில், இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. 1946ம் ஆண்டு இப்படி வந்த அவர்களுக்கு ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க ஐநா முடிவெடுத்தது. இதற்கான வாக்கெடுப்பில் இஸ்ரேல் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தற்போதைய இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. எவ்வளவு முயன்றும் காசாவை இஸ்ரேலால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. எனவே அதை ஒரு திறந்தவெளி சிறையாக இஸ்ரேல் மாற்றியிருக்கிறது.
கடந்த காலங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினரும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை தொடங்கினர். எனவே இவர்களை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியது. பின்னர் இதையே சாக்காக வைத்து கடந்த காலங்களில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தீவிரமான தாக்குதல்களையும் நடத்தியது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.
இந்த பின்னணியில்தான் இரு தினங்களுக்கு முன்னர் காலை பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹமாஸ். ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் இதற்கு முன்னர் கூட சண்டையிட்டிருக்கிறார்கள். ஆனால், சமீபத்திய மோதல் அளவுக்கு மிக வீரியமான தாக்குதலை ஹமாஸ் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. எனவேதான் தற்போது இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது. தற்போது வரை இஸ்ரேலில் 900க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுபோல 2,500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு இதை விட அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு உதவ கதிரோவைட்ஸ் படை அனுப்பப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார். கதிரோவைட்ஸ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை ராணுவ படையாகும். ரஷ்யாவின் வார்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக திரும்பியபோது அதை எதிர்த்து சண்டையிட்டது இந்த துணை ராணுவ படைதான்
இந்நிலையில் இந்த படையின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் கூறுகையில், "இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதேபோல மேற்கு நாடுகள், போராளிகளை அளிப்பதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். இந்த போரை பொருத்த அளவில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம், இது மற்ற மோதல்களைப் போலல்லாமல் மேலும் மேலும் அதிகரிக்கலாம். மத்திய கிழக்கில் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் பிரிவுகளை நிலைநிறுத்த தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஈரான் இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் அதை மறுத்திருக்கிறது. மட்டுமல்லாது ஏதாவது ஒரு குண்டு கூட ஈரான் பக்கம் திரும்பினால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் போர் கப்பல் USS Gerald R Ford தற்போது காசாவுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த போரில் அமெரிக்க படை, இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்யும். அதன் பின்னர் ஈரான்தான் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் கோலோச்சும்.
ஆக நிலைமை இப்படி இருக்கையில், தற்போது ரஷ்யாவின் துணை ராணுவ படைகளில் ஒன்றான செச்சென் பிரிவு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அவசியமெனில் பாலஸ்தீனத்தில் சண்டை செய்வோம் என அறிவித்திருப்பது இஸ்ரேலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications