ஜேப்பியார் மரணம்... நல்ல நண்பரை, நலம் விரும்பியை இழந்து விட்டேன்... கமல் வேதனை
லாச் ஏஞ்செலஸ்: சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியாரின் மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவருமான ஜேப்பியார் சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜேப்பியாரின் மறைவுக்கு நடிகர் கமலும் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் தங்கியுள்ள கமல், அங்கிருந்தபடி பேஸ்புக் வாயிலாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ஜேப்பியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஜேப்பியாரின் மரணத்தால் மாணவர்களுக்கு நல்ல கல்வியாளரை இழந்த இழப்பு. எங்களைப் போன்றவர்களோ நல்ல நண்பரை, நலம் விரும்பியை இழந்துள்ளோம்' என வேதனைத் தெரிவித்துள்ளார்.