முட்டிக்கொண்டு நிற்கும் இந்தியா-கனடா பஞ்சாயத்து.. கொளுத்தி போடும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
டொரொண்டோ: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே இதுபோன்ற பேரணிகள் நடந்திருக்கின்றன. அதில் இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த கனடா தேர்தலில் பிரதமராக போட்டியிட்ட கர்னி இனி இதுபோன்று நடக்காது என்று உத்தரவிட்டிருந்தார். அவர் வெற்றி பெற்ற பின்னரும் இது இப்போது தொடர்ந்திருக்கிறது என்பதுதான் விவாதங்களுக்கு காரணம்.

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே காலிஸ்தான் செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று அப்போதைய பிரதமரான ட்ரூடோ தலைமையிலான அரசு குற்றம்சாட்டியது. இதனையடுத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவ்வப்போது இந்திய அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களும் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாகவே நேற்று கனடாவில் இந்த பேரணி நடந்திருக்கிறது. இதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொஞ்சம் ஓவராகவே போயிருக்கிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சிறைக்குள் அடைத்திருப்பதை போன்ற செட்டிங்கை ஏற்படுத்தி, இந்தியா அரசுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.
பேரணியில் கோஷம் போட்ட அவர்கள், இந்தியா ஒழிக என்றும், இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கனடாவில் இன்றைய தேதியில் சுமார் 8 லட்சம் இந்துக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் இவர்கள் கோரியிருப்பது பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதை போல இருக்கிறது. கனடாவில் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று அந்நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.
அப்படி இருக்கும்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுப்பும் இந்த கோரிக்கை, பிரிவினையை தூண்டுவதாகவும், இந்திய அரசை குறி வைப்பதாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கினற்ன.
இதில் முன்னரே குறிப்பிட்டதை போல ட்ரூடோ காலத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு, கர்னி காலத்தில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கர்னியும் தேர்தலில் நிற்கும்போது அதைத்தான் சொன்னார். இந்தியாவுடன் உறவு இயல்பு நிலைக்கு திரும்பும் என்று வாக்கு கொடுத்திருந்தார். அதாவது காலிஸ்தான் விஷயத்தில்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. விரிசலை சரி செய்ய வேண்டும் எனில், காலிஸ்தான் விவகாரத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும்.
நேற்று நடந்த பேரணியை பார்க்கும்போது கர்னியும், ட்ரூடோ லெவலில்தான் பிரச்சனையை அணுகுகிறாரோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications