இனி தப்ப முடியாது! இஸ்ரேல் திரும்ப எழ முடியாத அளவுக்கு அடிப்போம்.. ஈரான் தலைவர் கமேனி சூளுரை
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே இப்போது நேரடியாகவே மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கிடையே இஸ்ரேலை ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி நேரடியாக எச்சரித்துள்ளார். இஸ்ரேல் தனது குற்றத்திற்குத் தண்டனை இல்லாமல் தப்ப முடியாது என்ற அவர், பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் அதிகரித்தே வந்தது. இஸ்ரேல் முதலில் ஹமாஸ் உடன் போரை நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹவுதி என பல்வேறு அமைப்புகளுடன் இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டது. அவை எல்லாம் மெல்ல ஓய்ந்த நிலையில், இப்போது ஈரானை நேரடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளது.

தாக்குதல்
முதலில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் முதல் தாக்குதலை நடத்தியது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் தொடங்கிப் பல இடங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. இதில் ஈரான் ராணுவ தளபதிகள், மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் உட்படப் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது 100+ டிரோன்களை இஸ்ரேலை நோக்கி ஏவியது. இருப்பினும், அதில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் வீழ்த்திவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சில மணி நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி தரும் வகையில் இஸ்ரேல் மற்றொரு தாக்குதலை நடத்தியது. இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் உட்பட 100 இடங்களைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீது இப்படி அடுத்தடுத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் எச்சரிக்கை
இந்தத் தாக்குதல்கள் ஈரானை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி எச்சரித்துள்ளார். தீய சியோனிச ஆட்சியைத் துயரத்தில் ஆழ்த்தும் அளவுக்கு ஒரு வலுவான பதிலடி கொடுக்கப் போவதாகவும் கமேனி உறுதியளித்தார்.
அலி கமேனி வார்னிங்
இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் பதிவு செய்யப்பட்ட உரை அந்நாட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. அதில் இஸ்ரேல் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என கமேனி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் இந்த குற்றத்திற்குத் தண்டனையின்றி தப்ப முடியாது என்றும், ஈரானின் பதிலடிக்கு எந்த தடையும் இருக்காது என்றும் கமேனி தெரிவித்தார்.
பின்னணி என்ன
ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ஈரானிடம் அணு ஆயுதங்கள் செல்லக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இதற்காகவே டிரம்ப் நிர்வாகத்தினர் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஈரானிடம் அணு ஆயுதங்கள் வந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என இஸ்ரேல் நினைக்கிறது. இதன் காரணமாகவே திடீரென இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அணுசக்தி விஞ்ஞானிகள், அணுசக்தி மையங்களைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துப் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் மத்திய கிழக்கில் பிராந்திய மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications