ஒரு இன்ச் பார்டரை தாண்டினாலும்.. பேரழிவு உங்களுக்குத்தான்.. தென் கொரியாவை அதிர வைத்த கிம்மின் சகோதரி
பியாங்கியாங்: வடகொரியா மீது தென் கொரியா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா கடுமையாக தாக்கும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் உலக நாடுகளின் அறிவுரைகளையும் எதிர்ப்பையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆயினும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிறுத்தவே இல்லை.

வடகொரியா
இந்த நிலையில்தான் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய சோதனையை வடகொரியா செய்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் தென்கொரியாவில் ஏவுகணை செலுத்தும் மையத்தில் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் சென்றிருந்தார்.

தென் கொரியா
அப்போது அவர் தென் கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் வைத்திருக்கிறது. அவ்வாறு இருந்தால் அந்த நாட்டின் மீது துல்லியமாக தாக்குதல்களை நடத்துவதற்கான திறமை தென் கொரியா கொண்டுள்ளது. எனவே துல்லியமாகவும் திறமையாகவும் வேகமாகவும் வடகொரியாவை எப்போது வேண்டுமானாலும் தாக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

அதிர வைத்த அமைச்சர்
இவரது கருத்துகள் வடகொரியாவை அதிர வைத்தது. இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறுகையில் எங்களுக்கு போரிட விருப்பமில்லை. எப்போதும் ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எதிர்க்கிறோம். அவ்வாறு செய்தால் அது பேரழிவை ஏற்படுத்தும்.

முக்கிய எதிரியே இல்லை
மேலும் நாங்கள் தென் கொரியாவை முக்கிய எதிரியாகவே பார்க்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது தென் கொரியா வடகொரியா மீது ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளை எடுத்தால் அது எங்கள் மீதான தாக்குதல் என்று அர்த்தம் இல்லை. அந்த போரில் தென் கொரியா அழிய அவர்களே முன்னெடுப்புகளை எடுத்தது போல் ஆகிவிடும்.

தென்கொரியாவுக்கு எச்சரிக்கை
வடகொரியா எல்லையில் ஒரு அங்குலம் தென் கொரிய ராணுவத்தினர் நுழைந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவை அந்த நாடு சந்திக்கும். வடகொரிய ராணுவமும் தயவு தாட்சயமின்றி தங்கள் கடமையை செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள். இது வெறும் மிரட்டல் அல்ல.

போரிட்டால் அவ்வளவுதான்
தென் கொரியா எங்கள் மீது படையெடுத்தால் நாங்கள் எந்த மாதிரியான பதிலடியை கொடுப்போம் என்பதற்கான விரிவுரை இதுவாகும். அணு ஆயுதம் கொண்ட ஒரு நாட்டின் மீது தாக்குதலை நடத்தலாம் என பகல் கனவு காண்பதை தென் கொரியா தவிர்க்கலாம் என கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்தாலும் அடுத்த சக்தி வாய்ந்த தலைவராக அவரது சகோதரி கிம் யோ ஜாங் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications