2ம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கர் 93வது வயதில் மரணம்
ஜார்ஜியா: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவைச் சேர்ந்த தியோடர் வான் கிர்க் மரணம் அடைந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகர்கள் மீது அணுகுண்டு வீசித் தாக்கியது. இதில் ஹிரோஷிமா மீது லிட்டில் பாய் என்ற அணுகுண்டு வீசிய குழுவில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த தியோடர் வான் கிர்க்கும் ஒருவர்.
ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசியதற்காக தான் வருத்தப்படவில்லை என்று வான் கிர்க் தெரிவித்திருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வான் கிர்க் உடல் நலக்குறைவால் தனது 93வது வயதில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெனிசில்வேனியா மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வான் கிர்க்கின் மகன் டாம் கூறுகையில்
வான் கிர்க்கை அனைவரும் போர் ஹீரோ என்பார்கள். ஆனால் எங்களை பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த தந்தை என்றார்.
லிட்டில் பாய் குண்டை வீசிய குழுவினர் ஒவ்வொருவராக மரணம் அடைந்தனர். அந்த குழுவில் வான் கிர்க் மட்டும் தான் உயிருடன் இருந்தார். தற்போது அவரும் மரணம் அடைந்துள்ளார்.