வங்கதேசம்: எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியாவுக்கு வீட்டுக்காவல்

வங்காள தேசத்தில் வருகிற ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலை முன்னாள் பிரதமர் கலிதாஜியா மற்றும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இந்த தேர்தலை கண்டித்து கலிதாஜியாவின் வங்காளதேச தேசிய கட்சியும் அதன் தோழமை கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனால் கடந்த ஜனவரி முதல் நடந்த வன்முறை மோதல்களில் 271 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். 300 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு பாதிக்கும் மேற்பட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு எதிராக கலிதா ஜியா 29-ந் தேதி அவரது சொந்த ஊரான மேற்கு கோபால்கஞ்ச் என்ற இடத்தில் மாபெரும் கண்டன பேரணி நடத்துகிறார். அதில் பல்லாயிக்கணக்கானேர் பங்கேற்கின்றனர். எனவே அதில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கலிதா ஜியா அதிகார பூர்வமாக டாக்காவில் கைது செய்யப்படாமல் குல்ஷான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டை சுற்றி வளையம் போன்று போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவரை சந்திக்க கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கலிதா ஜியாவை சந்திக்க வந்த வங்காளதேச தேசிய கட்சியை சேர்ந்த 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வங்காள தேச தேசிய கட்சியின் துணைத்தலைவர் ஷம்ஷெர் மொனபின் சவுத்ரி தெரிவித்துள்ளார். வருகிற 29-ந் தேதி நடைபெறும் எதிர்க் கட்சிகளின் பேரணியை தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி இது என கூறியுள்ளார்.
ஆனால் கலிதா ஜியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீடு மற்றும் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று ஒரு தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications